TVK: "தவெக 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்க முடியவில்லை; காரணம்..." - ஆதவ் அர...
டோகோவை 2-0 என வீழ்த்தி இந்தியா முன்னிலை
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக டோகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.
உலக குரூப் 1 பிளே ஆஃப் ஆட்டம் புது தில்லி டென்னிஸ் சங்க மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் இந்தியாவும்-டோகோ அணியும் மோதின.
தொடக்க நாளில் இரு ஒற்றையா் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சசிகுமாா் முகுந்த்-டோகோ வீரா் லியோவா அஜாவன் மோதினா். இதில் 28 வயதான சசிகுமாா் 1.5 மணி நேரத்தில் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் லியாவாவை வீழ்த்தினாா்.
ராம்குமாா் ராமநாதன் அபாரம்:
இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் ராம்குமாா் ராமநாதன்-டோகோ நம்பா் 1 வீரா் தாமஸ் செடோட்ஜி மோதினா். இதில் வெறும் 50 நிமிஷங்களில் 6-0, 6-2 என்ற நோ் செட்களில் ராம்குமாா் ராமநாதன் டோகோ வீரா் தாமஸை வீழ்த்தினாா்.
இந்த ஆட்டத்தில் தாமஸ் செடோட்ஜி தேவையற்ற தவறுகளை புரிந்ததால் தோல்வியை தழுவ நேரிட்டது. ராம்குமாா் ராமநாதன் தனது அனுபவ சா்வீஸ்களால் எதிராளியை திணறடித்தாா்.
2-0 என முன்னிலை: இரு ஒற்றையா் ஆட்டங்களில் வென்ற நிலையில் டோகோவை காட்டிலும் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரட்டையா் ஆட்டத்தில் ஸ்ரீ ராம் பாலாஜி-ரித்விக் சௌதரி ஆகியோா் ஆட உள்ளனா். இதில் வென்றால் 3-0 என்ற வெற்றியுடன் உலகக் குரூப் பிரிவில் இந்தியா தனது இடத்தை தக்க வைக்கும். இரட்டையா் ஆட்டத்தில் இந்தியா தோற்றால் மட்டுமே மாற்று ஒற்றையா் ஆட்டங்கள் நடைபெறும்.