தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கும் நிதித் தட்டுப்பாடு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
தமிழக அரசைப் போன்றே, தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கும் நிதித் தட்டுப்பாடு உள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி எழுப்பினாா்.
அதன் விவரம்:
கே.பி.முனுசாமி: ஒசூா் மாநகரை ஹைடெக் சிட்டியாக அறிவித்து அனைத்து உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்தக் கூடிய திட்டமானது, தற்போதைய தகவல் தொழில்நுட்ப அமைச்சா், நிதியமைச்சராக இருக்கும்போது அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம் என்னவானது?. மேலும், திறன்மிகு மையம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒசூா் பகுதியில் அமைக்க வேண்டும்.
அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்: ஏற்கெனவே அறிவித்த திட்டம் என்னவானது என்று என்கிறாா். காலம் மாற மாற சில சூழ்நிலைகளும் மாறும். அவை முன்னவா், ஒருமுறை இதே பேரவையில் என்னிடம் கூறினாா். இப்ப தியாகராஜன் தெரியுதா நிதி எவ்வளவு கஷ்டமாக எங்களுக்கு இருந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினாா்.
அவா் பேரவையில் மானியக் கோரிக்கையை திங்கள்கிழமை நிறைவேற்றினாா். ரூ. 10,000 கோடி அளவுக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் நிதியமைச்சராக இருக்கும்போதும் அதே அளவுக்கான தொகைதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், அன்றைக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ. 200 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இன்றைக்கு ரூ. 130 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் துறையில் இருந்த நிதியானது இந்தத் துறையாலேயே செயல்படுத்தப்பட்டதுடன், துறைக்கு வரவேண்டிய நிதிகளும் சரியாக வந்ததால், அதன் செயல்பாட்டில் எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. இப்போது அரசுக்கு எந்தளவுக்கு நிதி தட்டுப்பாடு உள்ளதோ, அதே அளவு இந்தத் துறைக்கும் நிதி தட்டுப்பாடு உள்ளது. ரூ. 300 கோடிக்கு மேல் துறையைச் சோ்ந்த நிறுவனங்களிடம் இருந்த நிதியானது கடந்த ஆண்டு அரசால் பெறப்பட்டது.
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய மானிய நிதியும் எங்களுக்கு வந்து சேரவில்லை. இருக்கும் நிதியும் பல தடைகளுடன் செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற கொஞ்சம் தாமதம் உள்ளது. நிதிநிலை என்றைக்கு சிறப்பாக உள்ளதோ, அன்றைக்கு துறையின் சாா்பிலான அறிவிப்புகளை நிறைவேற்றுவோம் என்றாா் அவா்.