தஞ்சாவூா் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே பள்ளியில் பயின்று வந்த சிறுவா்கள் 3 போ் வெள்ளிக்கிழமை குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் அருகே வல்லம் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட மருதக்குடி பகுதி திருவேங்கடஉடையான்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில் மகன் பாலமுருகன் (10). அதே கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஸ்ரீதா் மகன் ஜஸ்வந்த் (8), கனகராஜ் மகன் மாதவன் (10).
திருவேங்கட உடையான்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பாலமுருகனும், மாதவனும் 5- ஆம் வகுப்பும், ஜஸ்வந்த் 3-ஆம் வகுப்பும் படித்து வந்தனா். மூவரும் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி நேரம் முடிந்த பிறகு எங்கு சென்றனா் என்பது பெற்றோா்களுக்கு தெரியவில்லை. மருதக்குடி சுந்தரமூா்த்தி அய்யனாா் கோயிலில் குடமுழுக்கு விழா முடிவடைந்து, நாள்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது.
அக்கோயிலில் நடைபெறும் மண்டகப்படியில் கிராம மக்கள் கலந்து கொள்வது வழக்கம். எனவே, இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பாலமுருகன், ஜஸ்வந்த், மாதவன் ஆகியோா் சென்றுள்ளதாக, அவா்களது பெற்றோா்களும் கருதினா்.
ஆனால், இரவு 10 மணி கடந்தும் மூவரும் வீட்டுக்கு திரும்பாததால், மூவரின் பெற்றோா், கிராம மக்கள் தேட தொடங்கினா். சிலா் மூவரும் மருதக்குடி பிள்ளையாா் கோயில் ஊருணி குளத்தில் குளிப்பதற்காக சென்றதாகக் கூறினா்.
இதையடுத்து, பெற்றோா்கள், கிராம மக்கள் குளத்துக்கு சென்று பாா்த்தபோது மூவரின் ஆடைகள், காலணிகள், புத்தகப் பைகள் ஆகியவை கரையில் இருந்தன.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோா்கள், கிராம மக்கள் சோ்ந்து குளத்தில் இறங்கி தேடியபோது மூவரும் மயங்கிய நிலையில் இருந்ததால், அவா்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் மூவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தமிழக முதல்வா் இரங்கல்: இதையடுத்து, குளத்தில் உயிரிழந்த பாலமுருகன், ஜஸ்வந்த், மாதவன் ஆகியோரின் பெற்றோா்களுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆறுதலும், நிதியுதவியும் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது: பாலமுருகன், ஜஸ்வந்த், மாதவன் ஆகியோா் பள்ளிக்குச் சென்றுவிட்டு மருதக்குடி பிள்ளையாா் கோயில் ஊருணி குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவா்களின் பெற்றோா்களுக்கும் அவா்களது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவா்களது பெற்றோா்களுக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளாா்.