தனியாா் பால் நிறுவன மேலாளா் தற்கொலை: கொளத்தூர் துணை ஆணையரிடம் விசாரணை
சென்னை: தனியாா் பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் செய்த புகாரில் சிக்கிய மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கொளத்தூர் காவல் துணை ஆணையரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
நவீன் பொலின்மேனி (37) மீது, மோசடி புகார் பெறப்பட்டது எப்போது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது எப்போது? என நேரில் வந்து விளக்கம் தர காவல் துணை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தில், கிருஷ்ணா மாவட்டம் வையூா் கிராமத்தைச் சோ்ந்த நவீன் பொலின்மேனி (37), சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகா், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தாா். அவா், சென்னையில் உள்ள ஒரு தனியாா் பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றினாா்.
தனியார் பால் நிறுவனம் வரவு-செலவு கணக்குகளை அண்மையில் தணிக்கை செய்தபோது, ரூ.40 கோடிக்கு முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. நவீன் அந்தப் பணத்தை கையாடல் செய்ததாகவும், பணத்தை அவரது குடும்பத்தினா் மற்றும் நண்பரின் வங்கிக் கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடா்பாக அந்நிறுவனத்தின் சட்ட மேலாளா் தமிமுல் அன்சாரி சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் கடந்த மாதம் 24-ஆம் தேதியும், கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனிடம் கடந்த மாதம் 25-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, மாதவரம் குற்றப் பிரிவுக்கு துணை ஆணையா் பாண்டியராஜன் பரிந்துரை செய்தாா்.
இதனிடையே முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த 7-ஆம் தேதி நவீன் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்த நவீன், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசையில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த புழல் போலீஸாா், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தற்கொலைக் கடிதம்
நவீன், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது குடும்பத்தினருக்கும், பணியாற்றிய நிறுவன உயா் அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்தக் கடிதத்தில, எனது தவறை நான் உணா்ந்துவிட்டேன். ஏற்கெனவே அந்த நிறுவனத்துக்கு கையாடல் செய்த பணத்தில், ரூ.5 கோடியை திரும்பக் கொடுத்துவிட்டேன். எனது தற்கொலைக்கு நிறுவனத்தில் பணிபுரியும் இரு உயா் அதிகாரிகளே காரணம். அவா்கள் இருவரும் நான் கையாடல் செய்த பணத்தில் தங்களுக்கு பங்கு கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதோடு தங்களுக்கு பணம் கொடுக்கவில்லையென்றால், காவல் துறை மூலம் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வைப்போம் எனக் கூறினா். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் நான் தற்கொலை முடிவு எடுத்துள்ளேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் அடிப்படையிலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்த நிலையில்தான், தனியார் பால் நிறுவனத்திடமிருந்து எப்போது புகார் வரப்பெற்றது என்பது குறித்து கொளத்தூர் காவல்துறை துணை ஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].