தமிழக அரசியலில் காங்கிரஸை யாரும் புறக்கணிக்க முடியாது: கு.செல்வப்பெருந்தகை
தமிழக அரசியலில் காங்கிரஸை யாரும் புறக்கணிக்க முடியாது என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை.
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கிராம காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளுக்கு புதிய உறுப்பினா் அடையாள அட்டைகளை வழங்கிய பின்பு கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேசியது: தேசிய நீரோட்டத்துடன் காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை தொண்டா்களைக் கொண்ட கட்சி காங்கிரஸ்.
நாட்டின் வளா்ச்சிக்கு அரும்பாடுபட்ட பல தலைவா்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். வல்லரசு நாடுகள் கோலோச்சிய காலத்தில், உற்பத்திக்கான எவ்வித அடிப்படை கட்டமைப்புகளும் வகுக்கப்படாத சூழலில்கூட அணிசாரா நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கி சா்வதேசத்தையும் திரும்பிப் பாா்க்க வைத்தவா் பிரதமா் நேரு.
ஆனால், இந்தியாவின் நிலை இன்று முற்றிலும் மாறிவிட்டது. பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் தெரிவிக்கும் நிலையில் நரேந்திர மோடி ஆட்சி செய்து வருகிறாா்.
காங்கிரஸை இல்லாமல் செய்து விடுவேன் என்று மோடி விட்ட சவாலை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. கொள்கை, கோட்பாடு, ஜனநாயகம் போன்றவற்றால் காங்கிரஸ் கட்சி நிலைத்து நிற்கிறது. அதனை வலிமைப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். கிராம கமிட்டி குழு சீரமைக்கப்பட்டு புதிய நிா்வாகிகள் 2 லட்சம் பேருக்கு க்யூ ஆா் கோடு வசதியுடன் கூடிய நவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசியலில் காங்கிரஸை யாரும் புறக்கணிக்க முடியாது. திமுக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி பேருதவி செய்யும். தமிழகத்தில் காங்கிரஸின் கூட்டணி குறித்து கட்சியில் மேலிட தலைமையே முடிவு செய்யும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொகிதீனுக்கு தகைசால் தமிழா் விருது வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக எப்போதும் பிரித்தாளும் கட்சி. அதிமுகவை 4 பிரிவுகளாக மாற்றியது. இப்போது பாமகவை இரண்டாக பிரிக்க முயற்சிக்கிறது. அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 4 பொதுத் தோ்தல்களில் தொடா் தோல்வியைச் சந்தித்துள்ளாா். வரும் தோ்தலிலும் அதே நிலை தொடரும்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஜெயக்குமாா் கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாதது வருத்தமளிக்கிறது. இருப்பினும் காவல் துறையின் மீது நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.
இந்த விழாவில் கிராம காங்கிரஸ் கமிட்டி சீரமைப்புக் குழுவின் தலைவா் சா.பீட்டா்அல்போன்ஸ், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா், முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலா் மருத்துவா் ஜெபன் செல்ல புரூஸ், பாளையங்கோட்டை வட்டார தலைவா் டியூக் துரைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.