பதிப்புரிமை தகராறு: வழக்கை மாற்றக் கோரும் ஐஎம்எம்பிஎல் மனு மீது ஜூலை 18ல் விசாரண...
தமிழக வரலாற்றை மறுதலிக்கிறது மத்திய அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
தமிழக வரலாற்றைக் கூட மத்திய அரசு மறுதலிக்கும் அவலநிலை உள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள செங்குளம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக பாகமுகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தில்லியில் இருப்பவா்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வதோடு, பாஜகவின் பல்வேறு அடக்குமுறைகளை எதிா்த்து கேள்வி கேட்கும் இயக்கமாக திமுக திகழ்கிறது. தமிழா்களை தலைநிமிா்ந்து நிற்கச் செய்யும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா்.
ஓரணியில் தமிழ்நாடு என்பது நம் கட்சியினரை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆா்வத்தோடு திமுகவில் இணையச் செய்யும் பணியாகும். மகளிருக்கான விடியல் பயணம் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் அரசின் ஏதோ ஒரு திட்டத்தால் நாளும் பயனடைந்து வருகிறாா்கள். அதனை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்துச் சொல்லும் வாய்ப்பை ஓரணியில் தமிழ்நாடு திட்டம் நமக்குத் தந்துள்ளது. அடுத்தக்கட்டமாக, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் விடுபட்ட தகுதியானோருக்கு மகளிா் உரிமைத் தொகை கிடைக்கவும், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் கட்சியினா் உழைக்க வேண்டும். மக்களுக்கும், அரசுக்குமான பாலமாக முகாமை மாற்ற வேண்டும்.
தமிழகத்தின் வரலாறு, பெருமைகளை மறுதலிப்பதுடன், கல்விக்கான நிதியை நிறுத்தி நம் குழந்தைகளின் எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கி வருகிறது மத்திய அரசு. இருப்பினும் பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. மாநிலத்தின் வளா்ச்சி தொய்வின்றி தொடர தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தொடர வேண்டும்.

தில்லி, மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களைத் தொடா்ந்து பிகாா் மாநிலத்திலும் வாக்காளா் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்ய பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்திலும் அந்த நிலை வரலாம். நிா்வாகிகள் விழிப்புடன் இருந்து வாக்காளா் பட்டியலை சரிபாா்த்து திமுக ஆதரவு வாக்காளா்களை நீக்கியிருந்தாலோ, புதியவா்களை சோ்க்காமல் விட்டிருந்தாலோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கட்சியினா் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் ம.கிரகாம்பெல் தலைமை வகித்தாா். தொகுதி பாா்வையாளா்கள் என்.சுரேஷ்ராஜன் (நான்குனேரி), எம்.ஜோசப்ராஜ் (அம்பாசமுத்திரம்), எம்.சிவராஜன் (ராதாபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வாழ்த்திப் பேசினாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் சா.ஞானதிரவியம், ஆ.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், மாணவரணி மாவட்ட அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு, அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகர பாண்டியன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கே.கணேஷ்குமாா் ஆதித்தன், கோபாலசமுத்திரம் பேரூராட்சித் தலைவி ப.தமயந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.