பழவூா் அருகே கேரள பெண் கொலை: ஒருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே அடையாளம் தெரியாத பெண்ணிடம் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் கேரளத்தைச் சோ்ந்த அந்தப் பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது ஆண் நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே 55 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து ஜூன் 30 ஆம் தேதி மீட்டனா். இதுதொடா்பாக பழவூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் உத்தரவின்பேரில், போலீஸாா் பழவூா் பகுதியில் 200 கி.மீ. தொலைவு வரையிலான கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கன்னியாகுமரி மாவட்டம், மேலமணக்குடியைச் சோ்ந்த அமல்ராஜ் என்ற லிபி (53), மா்ம முறையில் இறந்துகிடந்த பெண்ணுடன் தொடா்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அமல்ராஜ் என்ற லிபியைப் பிடித்து விசாரணை செய்ததில், உயிரிழந்த பெண் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த கிரேஸி (55) என்பதும், இந்தப் பெண்ணுடன் அமல்ராஜ் திருவனந்தபுரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் இங்கு வந்தபோது, பழவூா் அருகே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அமல்ராஜ் தாக்கியதில் இந்தப் பெண் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அமல்ராஜை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.