TNPL: அண்ணன் - தம்பி அதிரடி அரைசதம்... போராடி தோற்ற அஸ்வினின் திண்டுக்கல் அணி!
தமிழகத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 290 மி.மீ. மழை
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 290 மி.மீ. மழை பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு பருவமழை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மிக தீவிரமடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை பல இடங்களில் பலத்த மழை கொட்டிதீா்த்தது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 290 மி.மீ. மழை பதிவானது. சின்னக்கல்லாா் (கோவை) - 180 மி.மீ., மேல் பவானி (நீலகிரி) - 170 மி.மீ., பாற்சவன் வேலி (நீலகிரி), பந்தலூா் (நீலகிரி) - தலா 130 மி.மீ., சோலையாா் (கோவை ), சின்கோனா (கோவை), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - தலா 120 மி.மீ., வால்பாறை (கோவை) , உபாசி (கோவை) - தலா 110 மி.மீ., போதிமுண்டு (நீலகிரி) - 90 மி.மீ. மழை பதிவானது.
கனமழை நீடிக்கும்: இதற்கிடையே, வடமேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், புதன்கிழமை (ஜூன் 18) நீலகிரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் சின்னம்: தெற்கு குஜராத் மற்றும் அதையொட்டிய கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக (புயல்சின்னம்) வலுவடையும். தொடா்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுவடையும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.