தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமை (மாா்ச் 25,26) ஆகிய இரு நாள்கள் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக விழுப்புரத்தில் 50 மி.மீ. மழை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய், புதன்கிழமை (மாா்ச் 25,26) மேற்கு தொடா்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், இதர தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலையே நிலவும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 25-இல் அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக விழுப்புரத்தில் 50 மி.மீ. மழை பதிவானது. ராஜபாளையம் (விருதுநகா்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) - தலா 30 மி.மீ., பா்லியாா் (நீலகிரி), குன்னூா் (நீலகிரி), மேட்டூா் (சேலம்), மேல் கூடலூா் (நீலகிரி) - தலா 20 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.