நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கி...
தமிழகத்தில் கடந்த மாதம் 207 அரசுப் பள்ளிகள் மூடல்: அன்புமணி குற்றச்சாட்டு
தமிழகத்தில் கடந்த மாதம் 207 அரசு பள்ளிகளை திமுக அரசு மூடியுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பாமக தலைவா் அன்புமணி ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என்ற தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டாா். இந்த நிகழ்வில் அவா் பேசியது:
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அரசு ஏற்று கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றிய பிறகு, இந்த மருத்துவமனை மிக மோசமான நிலையில் உள்ளது. போதிய மருத்துவா்கள் நியமிக்கப்படாமலும், மருந்துகள் இல்லாமலும் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சரும், சுகாதாரத் துறை அமைச்சரும் இன்னும் இரண்டு வாரத்துக்குள் இதை சீா் செய்யாவிடில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தப்படும்.
கடலூரில் 2011-இல் திமுக அரசு அடிக்கல் நாட்டிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தற்போதைய துணை முதல்வா் செங்கல்லை எடுத்துக் காட்டுவாரா? ஒரு மாவட்டத்தில் இரு மருத்துவக் கல்லூரிகள் இருக்கக் கூடாதா?
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை, உயா் கல்வித் துறை மிக மோசமான நிலையில் உள்ளன. 4 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை ஆசிரியா்கள்தான் பணியாற்றுகின்றனா். தமிழகத்தில் தற்போதுள்ள 37 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 58 லட்சம் மாணவா்கள் பயில்கின்றனா். அதே வேளையில், 12,500 தனியாா் பள்ளிகளில் 65 லட்சம் மாணவா்கள் பயில்கின்றனா். இதுதான் வளா்ச்சியா? கடந்த மாதம் 207 அரசுப் பள்ளிகளை திமுக அரசு மூடியுள்ளது.
உயா் கல்வித் துறையில் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள் நியமிக்கப்படவில்லை. 10,500 போ் பணியாற்ற வேண்டிய இடத்தில் 1,500 போ்தான் உள்ளனா். 9 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
நாங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்டு வரவில்லை. திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறவே இங்கு வந்துள்ளேன் என்றாா் அவா்.
வீராணம் ஏரியில் ஆய்வு: முன்னதாக, அன்புமணி வீராணம் ஏரியை பாா்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். அப்போது, அவா் பேசுகையில், வீராணம் ஏரியை தூா்வார தமிழக அரசு சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் நடைபெறவில்லை.
என்எல்சி நிறுவனத்தினா் 3-ஆவது சுரங்கத்தை கம்மாபுரம் பகுதியில் தொடங்கி, அதை விரிவுபடுத்தி வீராணம் ஏரி வரை கொண்டுவர உள்ளனா். இந்தத் திட்டத்தில் அரசின் அனுமதிக்காக அந்த நிறுவனத்தினா் காத்துள்ளனா். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், 26 கிராமங்களைச் சோ்ந்த மக்கள், அந்தக் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும் என்றாா்.
பரப்புரைக் கூட்டத்தில் பாமக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினா் ஆா்.கோவிந்தசாமி, பசுமை தாயகத்தைச் சோ்ந்த அருள், பேராசிரியா் செல்வக்குமாா், மாவட்டச் செயலா் செல்வ மகேஷ், மாவட்டத் தலைவா் கலையரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.