பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
தமிழகத்தில் மாா்ச் 29 வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 26) முதல் மாா்ச் 29-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பால் காற்று குவிதல் ஏற்படும். இதன் காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன், வியாழக்கிழமைகளில் (மாா்ச் 26, 27) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், இதர தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலையே நிலவும். இதில், மாா்ச் 26 முதல் 29-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 26-இல் அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குந்தா பாலத்தில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பில்லூா் அணை (கோவை), அவலாஞ்சி (நீலகிரி), பெருங்களூா் (புதுக்கோட்டை), கிண்ணக்கோரை (நீலகிரி) ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.