நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவா்களின் கல்வியை காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யும்!...
LSG: லக்னோவுக்கு கேப்டன் ஆனாலே டக் அவுட் ஆவார்களா... அன்று கே.எல்.ராகுல் இன்று ரிஷப் பன்ட்!
ஐபிஎல்லில் கடந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததையடுத்து, லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலிடம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களையும் சஞ்சீவ் கோயங்கா எதிர்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல கே.எல்.ராகுலை லக்னோ கழற்றிவிட்டது. மறுபக்கம், யாரும் எதிர்பாராத விதமாக டெல்லி அணியிலிருந்து ரிஷப் பண்ட் ஏலத்தில் விடப்பட்டார்.
பின்னர், மெகா ஏலத்தில் எப்படியும் பன்ட்தான் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று அனைவரும் எதிர்பார்த்தது நிகழ்ந்தது. ஆனால், அதில் ஒரு ட்விஸ்ட்டாக ரிஷப் பன்ட்டை ரூ. 27 கோடி கொடுத்து வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது லக்னோ அணி.
மறுபக்கம், கே.எல். ராகுலை டெல்லி வாங்கியது. ஆனால், டெல்லி கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டார். இருப்பினும், டெல்லி vs லக்னோ ஆட்டம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர்.
அதற்கேற்றாற்போல, இவ்விரு அணிகளும் தங்களின் முதல் ஆட்டத்தில் நேருக்குநேர் மோதும் வகையில் ஐபிஎல் அட்டவணை வெளியானது. அதன்படி, மார்ச் 24 டெல்லி vs லக்னோ போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. தனக்குப் பெண் குழந்தை பிறந்ததால் கே.எல்.ராகுல் அணியில் இடம்பெறவில்லை.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி சிறப்பாகத் தொடங்கி நடுவில் சடசடவென விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 209 ரன்கள் குவித்தது.
அதையடுத்து, பந்துவீச்சிலும் சிறப்பாகத் தொடங்கிய லக்னோ அணி, முக்கியமான நேரத்தில் கேட்ச் உள்ளிட்ட வாய்ப்புகளைத் தவறவிட்டு கடைசி ஓவரில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைக் கோட்டைவிட்டது.
இதில், பேட்டிங்கில் டக் அவுட் ஆனதோடு, இரண்டாவது இன்னிங்ஸில் டெல்லி வீரர் அஷுதோஷ் சர்மாவின் கேட்சை விட்ட ரிஷப் பன்ட் விமர்சனங்களுக்குள்ளானார்.
இந்த நிலையில், லக்னோ அணிக்கு கேப்டனாகப் பதவியேற்பவர்கள் முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார்கள் என்ற தரவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தைத் தந்திருக்கிறது.
முன்னதாக, 2017-ல் பஞ்சாப் அணிக்குச் சென்ற கே.எல்.ராகுல் 2021 சீசன் வரை அங்கு விளையாடினார். 2020, 2021 சீசன்களில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். இதில், பஞ்சாப் அணியில் விளையாடிய வரையில் கே.எல்.ராகுல் ஒருமுறை கூட டக் அவுட் ஆனதில்லை.

ஆனால், 2022-ல் லக்னோ அணியில் இணைந்து, கேப்டனாகப் பொறுப்பேற்ற கே.எல். ராகுல் தனது முதல் போட்டியிலேயே (லக்னோ vs குஜராத்) டக் அவுட் ஆனார்.
அப்படியே, இப்போது ரிஷப் பண்ட்டுக்கு வருவோம். இவரும், டெல்லி அணியில் இருந்தவரை ஒருமுறை கூட டக் அவுட் ஆனதில்லை. ஆனால், இந்த சீசனில் லக்னோவில் இணைந்து கேப்டனாகப் பொறுப்பேற்று ஆடிய முதல் ஆட்டத்திலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார்.
இது முழுக்க அவர்களின் ஆட்டத் திறன் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் கூட, லக்னோ அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்றால் முதல் போட்டியிலேயே டக் வுட் ஆவார்கள் என்று ரசிகர்கள் விளையாட்டாக விமர்சித்து வருகின்றனர்.