Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி...
2-வது போட்டியிலும் தோல்வி: குஜராத்திடம் வீழ்ந்தது மும்பை!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியசாத்தில் தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 78 ரன்கள்(4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) சேர்த்தது. ஷுப்மன் கில் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 18 ரன்கள், ரஷித் கான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் கேப்டன் ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட், தீபக் சஹார், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாராயண ராஜு தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளைத் தெறிக்க விட்டார். இவரின் அதிரடி அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்தப் பந்திலேயே சிராஜின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அவரைப் போலவே அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய ரையனும் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்களில் வெளியேறினார். அவர்களுப்பின் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய திலக் வர்மா - சூர்ய குமார் யாதவ் இருவரும் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில், திலக் வர்மா 39 ரன்களில் ((3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்)) பெவிலியன் திரும்பினார். இருப்பினும் தனது பாணியில் அதிரடி காட்டிய சூர்யகுமார் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் 48 ரன்களில்(1 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் மின்ஸ் 3 ரன்களிலும், ஹார்திக் பாண்டியா 11 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 130 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. இறுதியில் ஜோடி சேர்ந்த நமன் திர் - சாண்ட்னர் இருவரும் அதிரடி காட்டினாலும், அவர்களால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. நமன் திர் - சாண்ட்னர் இருவரும் தலா 18 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
மும்பை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால், குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. குஜராத் தரப்பில் பிரஷித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வெற்றிக் கணக்கைத் தொடங்காத மும்பைக்கு இது 2-வது தோல்வியாகும். முன்னாள் சாம்பியனான குஜராத்துக்கு இந்தத் தொடரில் முதல் வெற்றி இதுவாகும்.