தலைநகரில் பாஜக ஆட்சி முதல்வராகிறாரா பர்வேஷ்?
தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், பாஜகவின் பர்வேஷ் சாயிப் சிங் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை (பிப்.8) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 1.30 மணி நிலவரப்படி பாஜக 28,238 வாக்குகள் பெற்றும், அரவிந்த் கேஜரிவல் 24,449 வாக்குகள் பெற்று பின்னடைவையும் சந்தித்துள்ளார். சுமார் 3,789 வாக்குகள் வித்தியாசத்தில் பர்வேஷ் முன்னிலை வகித்து வருகிறார்.
தேசிய தலைநகரில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக ஆதரவாளர்கள் வாத்தியங்கள், தாளங்களுடன் நடனமாடி, கட்சிக் கொடிகளை அசைத்து, ஒரு பண்டிகை போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.
பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையின் கட்அவுட்களை உயர்த்தியும், ஒருவருக்கொருவர் காவி நிறப் பொடியைப் பூசிக் கொண்டு மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்துள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்துள்ளது.
தலைநகரில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், பர்வேஷ் முதல்வராக மகுடம் சூடுவாரா என்று பாஜக தலைமையகம் விரைவில் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.