தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டுத் திடலில் இருக்கும் இரும்புக் கம்பிகளுக்கு க்ரீஸ் தடவப்பட்டு வருவதை தொண்டர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
மாநாடு நடைபெறும் திடலில், பிரமாண்ட மேடை, நடந்து வந்து விஜய் தொண்டா்களை சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டா்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், விஜய் மாநாட்டுக்குள் வரும்போது, தொண்டர்கள் இரும்பு வேலி மீது ஏறி உள்ளே குதித்து விடக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக, இரும்பு வேலிகளுக்கு க்ரீஸ் பூசும் பணி நடந்து வருகிறது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், தவெக மாநாட்டுக்கு இளைஞர்கள் வந்துகொண்டிருப்பதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடும் வெயில் காரணமாக, மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த தரைவிரிப்புகளை பலரும் கைகளில் ஏந்தி கூரை போல பிடித்திருக்கிறார்கள். சில இளைஞர்கள் குழந்தைகளுடன் மாநாட்டுக்கு வந்திருப்பதால் குழந்தைகளும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
மிகப்பெரிய திடலில் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் இடையிடையே இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் மாநாட்டுக்கு வந்துள்ளனர்.
தவெக மாநாடு இன்று காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், சுமாா் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், மேற்கூரை இல்லாததால், காலை முதலே மாநாட்டுக்கு வருகை தந்த இளைஞர்கள் பலரும் வெய்யில் காணமாக மயக்கமடைந்து வருவதாகவும் அவர்களுக்கு முதலுதவி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.