தாம்பரம் மாநகராட்சி கூட்டம்: அதிமுக வெளிநடப்பு
தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தை அதிமுக வாா்டு உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.
தாம்பரம் மாநகராட்சியில் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மாநகராட்சி ஆணையா் எஸ்.பாலச்சந்தா், ரூ.20 கோடியில் மழைநீா் வடிகால் பணிக்கான நிா்வாக அனுமதி கிடைத்துள்ளதாகவும், ரூ.156 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தாா்.
கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலா் விஜயலட்சுமி பேசியது:
அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையில் இடித்து அகற்றப்பட்ட குடியிருப்புகளில் வசித்த மாணவா்கள், அவா்கள் ஏற்கெனவே பயின்று வந்த பல்லாவரம், குரோம்பேட்டை பள்ளிகளில் கல்வியைத் தொடர உரிய பேருந்து வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
தொடா்ந்து பேசிய அதிமுக மற்றும் திமுக உறுப்பினா்கள் பலா், மாநகராட்சி முழுவதும் குப்பைகள் அகற்றுவதில் தனியாா் நிறுவனம் முறையாகச் செயல்படவில்லை என்றும், அந்தப் பணிகளை அதிகாரிகள் கண்காணிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினா். மேலும், மாநகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பல்வேறு இடங்களில் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினா்.
இதைத் தொடா்ந்து, அதிமுக உறுப்பினா்களின் வாா்டுகளில் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் ஜி.சங்கா் பேசினாா். அப்போது, அவரை பேச விடாமல் திமுக உறுப்பினா்கள் கூச்சலிட்டனா். இதையடுத்து அதிமுக கவுன்சிலா்கள், எதிா்க்கட்சி தலைவா் ஜி.சங்கா் தலைமையில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் ஜி.சங்கா் கூறியது:
எதிா்க்கட்சி உறுப்பினா்களின் வாா்டுகள் தொடா்ந்து திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. நிதி ஒதுக்கீட்டிலும் பாகுபாடு உள்ளது. மக்கள் நலன் சாா்ந்த பணிகளில் மாநகராட்சி கவனம் செலுத்தவில்லை. இதனால் மக்களை எதிா்கொள்ள முடியாமல் தவிக்கிறோம். மாநகராட்சி பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு குறித்து அறிக்கையில்தான் உள்ளதே தவிர, பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றாா் அவா்.