கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவற்றில் இருசக்கர வாகனம் மோதல்: 2 இளைஞர்கள...
தாயகம் திரும்பாத பஞ்சாப் கிங்ஸ் வெளிநாட்டு வீரர்கள்; ரிக்கி பாண்டிங் செய்தது என்ன?
ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் பலரும் தாயகம் திரும்பவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன.
இதையும் படிக்க: பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 தொடர் நடைபெறுமா?
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையேயான ஐபிஎல் தொடரின் 58-வது போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்த நிலையில், வெளிநாட்டு வீரர்கள் பலரும் தாயகம் திரும்பினர்.
ரிக்கி பாண்டிங் செய்ததென்ன?
ஐபிஎல் தொடர் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து வெளிநாட்டு வீரர்கள் பலரும் தாயகம் திரும்பிய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பாமல் இந்தியாவில் இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் நிறுத்தப்படுவதாக செய்தி வெளியானபோது, பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் அந்த அணியின் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்புவதற்கான விமானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடைசி நிமிடத்தில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தாயகம் திரும்பும் முடிவை கைவிட்டு, இந்தியாவில் இருப்பதென முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் குறித்து அச்சத்தில் இருந்த வெளிநாட்டு வீரர்களிடம் பேசி, அவர்களை இந்தியாவில் இருக்க பாண்டிங் சம்மதிக்கவைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஐபிஎல் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்... எங்கு நடத்தப்படும் தெரியுமா?
இது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாக தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இது போன்ற பதற்றமான சூழலை வெளிநாட்டு வீரர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். அதனால், அவர்கள் கவலையடைவது இயல்பானது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய வீரர்கள் தாயகம் திரும்புவதற்கு தயாராக இருந்தனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்த ஒப்புதலுக்குப் பிறகு, ரிக்கி பாண்டிங் அவர்களை இந்தியாவில் இருக்க சம்மதிக்க வைத்துள்ளார். இது ரிக்கி பாண்டிங்கின் குணாதிசயத்தைக் காட்டுகிறது. வீரர்கள் தாயகம் திரும்புவதை அவரால் மட்டுமே தடுத்திருக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தயாராக இருப்பது அந்த அணிக்கு சிறப்பான விஷயமாக அமைந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து மார்கோ யான்சென் தவிர்த்து, மற்ற வீரர்கள் அனைவரும் தற்போது இந்தியாவில் இருக்கிறார்கள். மார்கோ யான்சென் தற்போது துபை விமான நிலையத்தில் உள்ளார்.
தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக பாதியில் நிறுத்தப்பட்ட ஆட்டம், நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த போட்டி எங்கு, எப்போது நடைபெறும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க: இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
தாயகம் திரும்புவதற்காக விமானத்தில் புறப்பட இருந்த ஆஸ்திரேலிய வீரர்களான மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஷ் மற்றும் சேவியர் பார்ட்லெட் ஆகியோர் தற்போது இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.