சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
திமுக கவுன்சிலரின் கைத்துப்பாக்கியை திருடிய 2 பேர் கைது.. திருச்சி ஹோட்டலில் நடந்தது என்ன?
நகராட்சி கவுன்சிலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நகராட்சி கவுன்சிலர்களும், அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் வந்து கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு இங்கு 2 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி 20- வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சங்கர் என்பவர் கைத்துப்பாக்கியுடன் வந்து கலந்து கொண்டார்.
இந்தத் துப்பாக்கிக்கு அவர் முறைப்படி உரிமம் பெற்றுள்ளார். ஹோட்டலில் அவர் முகம் கழுவி விட்டு, கழிப்பறைக்கு சென்று விட்டு பயிற்சி கூட்டத்திற்கு மீண்டும் செல்லும் போது துப்பாக்கியை அங்கு வைத்து விட்டு மறந்துவிட்டார்.
அதன்பிறகு, பயிற்சி கூட்டத்தில் வழக்கம் போல் கலந்து கொண்டார். இந்நிலையில், இதைப் பார்த்த அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள் கைத்துப்பாக்கியை எடுத்து மறைத்து வைத்துள்ளனர்.
இதற்கிடையில், தனது துப்பாக்கியை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த திமுக கவுன்சிலர் சங்கர், ஹோட்டலில் உள்ள பல இடங்களில் அதை தேடினார். ஆனால், அவரது துப்பாக்கி கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே இச்சம்பவம் குறித்து கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த ஹோட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்களது தீவிர விசாரணைக்கு பின் ஹோட்டல் ஊழியர்கள் ஐந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து இதை எடுத்து மறைத்து வைத்தது தெரியவந்தது.
அதன்பின், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை கைது செய்தனர். மேலும், 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் தி.மு.க கவுன்சிலரின் கைத்துப்பாக்கி காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
