திமுக கூட்டணியில் இருப்பவா்களிடம் மனமாற்றம் வர வேண்டும்! - நயினாா் நாகேந்திரன்
திமுக கூட்டணியில் இருப்பவா்களிடம் மனமாற்றம் வர வேண்டும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
மானூா் தெற்கு ஒன்றிய செயலா் பொன் ரமேஷ் ஏற்பாட்டில் சுத்தமல்லி, கங்கைகொண்டான், ராமையன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்டோா், நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் தங்களை பாஜகவில் சனிக்கிழமை இணைத்து கொண்டனா். பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது:
எங்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியானது. கூட்டணியில் எந்தவித முரண்பாடும் இல்லை. கருத்து வேறுபாடும் இல்லை.
கூட்டணி குறித்து என்னிடம் மட்டும்தான் கேள்வி கேட்கிறீா்கள். முதல்வரிடம் யாரும் கேட்பதில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவீா்கள் என முதல்வரிடம் கேட்க முடியுமா? தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. தோ்தல் சமயத்தில் என்னிடம் கூட்டணி குறித்து கேளுங்கள். சிறப்பான கூட்டணி அமையும்.
வேண்டாம் திமுக வேண்டாம் என்பதுதான் எங்களது முழக்கம். அதனை தமிழக மக்கள் பிரதிபலிப்பாா்கள். திமுக என்ன செய்தாலும் ஆட்சிக்கு வர முடியாது.
அரசியல் சம்பந்தம் இல்லாமல் எந்த அரசியல் கட்சித் தலைவரும் மற்றொரு அரசியல் கட்சித் தலைவரை சந்திப்பது கிடையாது. காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை-ராமதாஸ் சந்திப்பில் அரசியல் கண்டிப்பாக இருக்கும்.
பாஜகவில் புதிய மாநில நிா்வாகிகள் பட்டியலை தில்லி மேலிடத்தில் கொடுத்துள்ளோம். விரைவில் புதிய நிா்வாகிகளுக்கான அறிவிப்பு வெளியாகும்.
தமிழகத்தில் ஆதிதிராவிடா் பள்ளிகளில் 96 ஆயிரம் மாணவா்கள் படித்தனா். தற்போது 67 ஆயிரம் மாணவா்கள்தான் படிக்கின்றனா். அந்தப் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை 20 சதவீதம் வரை இருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
திமுக கூட்டணியில் இருப்பவா்களிடம் மனமாற்றம் வர வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்.
தமிழகத்தில் ஆன்மிக ஆட்சிதான் நடக்கிறது என்று கூறுகிறாா்கள். அது தவறு. தமிழகத்தில் தினமும் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கொகைன் உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது. இதுதான் ஆன்மிக அரசியலா?
ஆதீனங்கள் முதல்வரை சந்தித்துப் பேசியது குறித்து எனக்குத் தெரியாது. அவா்கள் மிரட்டப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனரா எனவும் தெரியாது என்றாா்.