`2027-ல் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு' தரவுகள் எப்படி எடுக்கப்படும்?
திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு
அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பானது அதிகாலை 5:50 முதல் இரவு 11 மணி வரை தமிழிலும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5:50 வரை ஹிந்தியிலும் ஒலிபரப்பாகிறது. இதை மறைமுக ஹிந்தி திணிப்பின் செயல்பாடாகவே நான் கருதுகிறேன். சென்னை பண்பலை எண் 101.4 ஒலிபரப்பு 02.07.2024 அன்றிலிருந்தும், திருச்சி பண்பலை 102.1 ஒலிபரப்பு 09.04.2025 இல் இருந்தும் இரவில் ஹிந்தி ஒலிப்பரப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இது தில்லியிலிருந்து ஒலிபரப்பப்படுகிறது.
விளம்பர வருமானம் இல்லாத குமரி பண்பலையில் 24 மணிநேரமும் தமிழ் ஒலிபரப்பப்படுகிறது. ஆனால் திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக ஹிந்திக்கு மாற்றுவது ஏற்புடையது அல்ல. இதைத் தொடர அனுமதித்தால் அனைத்து பண்பலைகளும் முழு நேர ஹிந்தி ஒலிபரப்பிற்கு மாற்றப்படும் அபாயம் உள்ளது.
எனவே, மத்திய அரசு மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் இதில் உரிய கவனம் செலுத்தி, உடனே திருச்சி மற்றும் சென்னை வானொலியில் முழு நேரமும் தமிழ் ஒலிபரப்பை வழங்கிட வேண்டும்.