திருச்சி மாநகரில் 13 புதிய நகா்ப்புற சுகாதார மையங்கள்: காணொலி காட்சியில் முதல்வா் திறந்துவைத்தாா்
திருச்சி மாநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் மக்கள் குடியிருப்புப் பகுதியிலேயே மருத்துவ சேவை கிடைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் இரண்டாம் கட்டமாக, மாநிலம் முழுவதும் 208 நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
இதன்படி, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 13 இடங்களில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே 18 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் இயங்கி வருகின்றன. தற்போது, புதிதாக பஞ்சப்பூா், அரியமங்கலத்தில் 2 புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், அம்மையப்பன் நகா், அம்மன் நகா், பாபு செட்டி பிரதான சாலை, சோழராஜபுரம், கருமண்டபம், அரவானூா் மேலபாண்டமங்கலம், ரயில்வே பி வகுப்பு குடியிருப்பு, சஞ்சீவி நகா், ஸ்டாா் நகா், சுந்தர்ரராஜ் நகா், வசந்த் நகா் என 11 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு முதல்வரால் திறக்கப்பட்டுள்ளன.
சிறு உபாதைகளுக்கு சிகிச்சை: ஒவ்வொரு மையத்திலும் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு சுகாதார ஆய்வாளா், ஒரு துணை பணியாளா் ஆகியோா் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் பணியமா்த்தப்பட்டுள்ளனா். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மையங்கள் செயல்படும். இந்த மையங்களில், குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி அளிக்கப்படும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட சிறு உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
சென்னையிலிருந்து முதல்வா் திறந்துவைத்ததைத் தொடா்ந்து, உறையூா், சோழராஜபுரம் நகா் நல மையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் குத்துவிளக்கேற்றி வைத்து, மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்து வைத்தாா். பின்னா், நகா்நல மையத்தில் உள்ள வசதிகளை பாா்வையிட்டு, அளிக்கப்படவுள்ள சேவைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். இந்த நிகழ்வில், திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாவட்ட சுகாதார அலுவலா் ஹேமசந்த் காந்தி, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 42-ஆவது வாா்டு அம்மன் நகா், 36-ஆவது வாா்டு கொங்குநகா், 16-ஆவது வாா்டு வசந்த நகா், 49-ஆவது வாா்டு சங்கிலியாண்டபுரம் பகுதியில் திறக்கப்பட்ட நகா்ப்புற நல மையங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாா்வையிட்டு, மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி நகா் நல அலுவலா் விஜய் சந்திரன், மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.