திருச்செந்தூர் குடமுழுக்கு: திருக்கோயில் ராஜகோபுரத்தில் சிற்பங்களின் சிறப்புகள் என்ன தெரியுமா?
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 27-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் திருக்கோயில் ராஜகோபுரம், கலசங்கள், கோயில் வளாக பணிகள் என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

தற்போது திருக்கோயில் ராஜகோபுரத்தில் திருநீறு வர்ணம் பூசப்பட்டு அதற்கு மேல் செம்பு வர்ணத்தில் ஒரு வேல் வைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ராஜகோபுரத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளதால் கோபுரத்தில் மிகவும் பழமையான சிற்பங்கள் மிகவும் தத்ரூபமாகவும் அழகாகவும் காட்சி அளிக்கிறது. 137 அடி உயரம் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் ஆயிரக்கணக்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த ராஜகோபுரத்தில் கஜசம்ஹார மூர்த்தியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இந்த கஜசம்ஹார மூர்த்தி என்பது யானை ரூபத்தில் வந்த அரக்கனை சிவபெருமான் அழிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பைரவர், சந்திரசேகரர், பிரதோஷமூர்த்தி, பிரம்மா, கஜேந்திர மோட்சம், காளி, மேளகனங்கள் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது.

அம்மையப்பர் திருக்கல்யாணம், பைரவர், யாழியின் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் யேகபாத மூர்த்தியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. அதிக அளவில் கோபுரங்களில் லிங்கோத்பவரின் சிற்பங்கள் தான் இடம் பெற்றிருக்கும். ஆனால் அதற்கு பதிலாக இங்கு யேகபாதமூர்த்தியின் சிற்பம் இடம் பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகன், நடராஜர், மகிஷாசுரமர்த்தினி, பிச்சாடனார், முனிவர்கள் தவம் இருப்பது போலும், முனிவர்கள் அன்னம் சாப்பிடுவது போலும் இந்த கோபுரத்தில் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது. முனிவர்கள் இல்லாமல் ராஜகோபுரம் இல்லை. ஆனால் முனிவர்கள் அமர்ந்து அன்னம் சாப்பிடுவது போல் இந்த கோபுரத்தில் இருப்பது மிகவும் சிறப்பு பெற்றது.

எனவே தான் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னும் எண்ண முடியாத அளவுக்கு பார்த்து ரசிக்கும் அளவுக்கு இந்த ராஜகோபுரத்தில் சிற்பங்கள் உள்ளது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிறிது நேரம் செலவிட்டு ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களை ரசித்து செல்லலாம்.