அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425...
கும்பகோணம் அருகே பர்னிச்சர் கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்
கும்பகோணம் அருகே பர்னிச்சர் கடையில் சனிக்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் மற்றும் வலங்கைமான் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்திருந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஒத்த தெருவில் ராஜா என்பவர் சொந்தமாக பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு வீடுகள், அலுவலகங்களுக்கு தேவையான பல்வேறு வகையான பொருள்கள் உள்ளது. இதில் பிளைவுட், ரெக்சின், போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருள்கள் இருந்தன.
இந்த நிலையில், வழக்கம் போல் வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்ததும் உரிமையாளர் ராஜா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். சனிக்கிமை அதிகாலை பர்னிச்சர் கடையில் கரும்புகை கிளம்பி உள்ளது. இதையடுத்து அருகில் இருந்தோர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கடையில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருந்ததால் தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போராடினர்.
பின்னர் பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் வலங்கைமான் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் கூறினர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனவும், இதில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.