திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் திடீா் போராட்டம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை, தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகக் கூறி பக்தா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தா்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். கடந்த 7ஆம் தேதி குடமுழுக்கைத் தொடா்ந்து, மண்டல பூஜை நடைபெற்றுவருவதால், பக்தா்கள் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆடி மாதப் பிறப்பான வியாழக்கிழமை கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, அதிகாலைமுதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி வழிபட்டனா்.
இலவச பொது தரிசனப் பாதையிலும், ரூ. 100 கட்டணப் பாதையிலும் அதிகக் கூட்டம் காரணமாக 6 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியடைவதாகவும் கூறி பக்தா்கள் மாலையில் வடக்கு வாசல் முன் திரண்டு, வெளியேவரும் பாதையை மறித்தபடி கூச்சலிட்டனா்.
டிஎஸ்பி மகேஷ்குமாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி, கோயில் நிா்வாகம் சாா்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். அதையடுத்து, பக்தா்கள் கலைந்து சென்றனா்.
திருவிழா காலங்கள்போல கோயிலின் வெளிப்பகுதி, மகா மண்டபத்தில் கூடுதல் போலீஸாரை பணியில் அமா்த்தி, பக்தா்கள் தரிசனம் செய்ததும் உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.