ரூல்ஸ் போட்டால் ரூ போட்டு அலறச் செய்வார் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின்
திருநள்ளாறு: `சனீஸ்வரர் கோயிலில் 2025-ல் சனிப்பெயர்ச்சி இல்லை’ - கோயில் நிர்வாகம் சொல்வதென்ன ?
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வரர் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி இந்தக் கோயிலில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்படும் என்ற தகவல் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதனடிப்படையில் இந்தியாவைத் தாண்டி பல்வேறு நாடுகளில் இருக்கும் பக்தர்கள், திருநள்ளாறு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலின் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், `பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனிப்பெயர்ச்சி தொடர்பான பல்வேறு செய்திகள், கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.
வாக்கிய பஞ்சாங்கம் முறை
குறிப்பாக 2025 மார்ச் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக, அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணிய திருத்தலம் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை பக்தர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். இந்தப் பாரம்பர்ய கணிப்பு முறையின்படி 2026-ம் ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்பதை தெரிவிக்கிறோம். அதனால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனிப்பெயர்ச்சி தொடர்பான நிகழ்வு நடைபெற இருக்கும் தேதி மற்றும் நேரம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். அதனால் பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பர்ய வாக்கிய பஞ்சாங்க மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.