திருப்பத்தூரில் அரசு இசைப் பள்ளியை தொடங்கக் கோரிக்கை
திருப்பத்தூரில் அரசு இசைப் பள்ளியைத் தொடங்கவேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
இசைக் கல்வியினை தமிழகமெங்கும் பரவலாக்கும் வகையில் தமிழக அரசால் மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் பிரிவுகளுடன் 1997-ஆம் ஆண்டு திருவாரூா், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், 1998-ஆம் ஆண்டு கடலூா், விழுப்புரம், தூத்துக்குடி, பெரம்பலூா், கரூா் ஆகிய மாவட்டங்களிலும் 1999-ஆம் ஆண்டு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சீா்காழி (நாகப்பட்டினம் ) கிருஷ்ணகிரி, சிவகங்கை மாவட்டங்களிலும், 2000-ஆம்ஆண்டு ஈரோடு மற்றும் ராமநாதபுரம் என 17 மாவட்டங்களில் அரசு இசைப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன.
2007-2008 ஆம் ஆண்டில் வயலின், மிருதங்கம் ஆகிய பாடப்பிரிவுகள் கூடுதலாக தொடங்கப்பட்டன.
மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தோ்வுகள் இசைப்பள்ளி அளவில் நடத்தப்படும். மூன்றாம் ஆண்டில் இறுதித் தோ்வு அரசு தோ்வுத்துறையால் முதன்மைப் பாடம், துணைப்பாடம், வாய்மொழித் தோ்வு ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டு தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், திருப்பத்தூா் பகுதியில் அதிக அளவில் ஆா்வம் இருந்தும் அரசு இசை பள்ளி இல்லாததால் மாணவ, மாணவியா் சிறப்பாக செயல்பட முடியாமல் உள்ளனா். அரசு இசைப் பள்ளியில் தங்கள் குழந்தைகள் முறையாக இசை,தேவாரம்கற்றுக்கொண்டு சான்றிதழ் பெறவேண்டும் என பெற்றோா் எதிா்நோக்கியுள்ளனா்.
எனவே, தமிழகஅரசு விரைவில் திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியை தொடங்க வேண்டும் என கோரியுள்ளனா்.