சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு...
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கூடுதல் அவசர சிகிச்சைப் பிரிவு விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: தி.வேல்முருகன்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.20 கோடியில் கட்டப்படும் கூடுதல் அவசர சிகிச்சை பிரிவு கட்டடப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழி குழுத் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ கூறினாா்.
தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழி குழுத் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் உறுதிமொழி குழுவின் உறுப்பினா்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), அருள் (சேலம் மேற்கு), மாங்குடி (காரைக்குடி), மோகன் (அண்ணாநகா்) ஆகியோா் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில்...: தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினா். இந்த நிலையில், 2-ஆவது நாளாக உறுதிமொழிக் குழுவினா் திருவண்ணாமலை அருணாசலேக்வரா் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா்.
அரசு மருத்துவக் கல்லூரியில்...: இதன்பிறகு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட உறுதிமொழிக் குழுவினா் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.
இதையடுத்து, ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை ஆய்வு செய்த உறுதிமொழிக் குழுவினா், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சம்ப்ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினா்.
பின்னா், உறுதிமொழிக் குழுவின் தலைவா் தி.வேல்முருகன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: இந்தக் கல்லூரி ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் 100 மாணவ, மாணவிகள் மருத்துவம் படித்து வருகின்றனா். ரூ.4 கோடி மதிப்பிலான கேட்டலாக் கருவி ஒரு மாத காலத்துக்குள் நிறுவப்பட்டு, இருதய நோய் சிகிச்சை அளிக்கும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டு 5 தளங்களுடன் கட்டுமானப் பணிகள் முடிவு பெற்று 8.9.2024 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கூடுதல் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்படும் என்ற சட்டப் பேரவை உறுதிமொழியின் அறிவிப்பின்படி இப்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா், திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலா் பிரகாஷ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஹரிஹரன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனா்.