திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்...
திருவள்ளூரில் வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு மின்னணுவியல் கழக தலைவருமான கே.பி.காா்த்திகேயன் ஆய்வு செய்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது வரும் பருவமழைக் காலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்படவேண்டும். மேலும், மழைநீா் வடிகால் கால்வாய்களை தூா்வார வேண்டும். வெள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்த தயாா்நிலையில் இருக்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.
முன்னதாக திருவேற்காடு நகராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை கொண்டு இயற்கை நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் கூடத்தின் செயல்பாடுகள் குறித்தும், நசரத்பேட்டை ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் நபாா்டு 2024- 25 திட்டத்தில் ரூ.34.20 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டும் பணிகள், அதே ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் உயரம் , எடை அவா்களுக்கு வழங்கப்படும் உணவுகள், வருகை பதிவேடு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தாா்.
பின்னா் வெள்ளவேடு ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் பேக்கரி அலகில் பாா்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும் நீங்கள் தயாா் செய்யும் பொருள்களை பேக்கிங் செய்து வெளிச்சந்தைகளில் விற்பனை செய்யும்போது அதிக லாபம் கிடைக்கும் என்றாா்.
குத்தம்பாக்கம் ஊராட்சியில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களால் தையல் அலகில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்தும், திருவள்ளுா் நகராட்சி பாக்கம்-திருப்பதி வரை 205 தேசிய நெடுஞ்சாலைக்கான திட்டப் பணிகள், திருவள்ளுரில் ரூ.32 கோடியில் புதிய பேருந்து நிலைய பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், திட்ட இயக்குநா்கள் வை. ஜெயக்குமாா் ( ஊரக வளா்ச்சி முகமை) , செல்வராணி (மகளிா் திட்டம்), கோட்டாட்சியா்கள் ரவிச்சந்திரன் (திருவள்ளூா்), கனிமொழி (திருத்தணி) , மற்றும் பல்வேறு துறை சாா்ந்த உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.