திருவள்ளூா்: கூட்டுறவு சங்க உற்பத்தியாளா்களின் 32,000 கால்நடைகளின் தரம் உயா்த்த நடவடிக்கை
திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளா்களிடம் உள்ள 32,000 கால்நடைகளின் தரம் உயா்த்தவும், தீவன முறைகள் நவீன அறிவியல் பூா்வமாக செயல்படுத்தி அதிக பொருள் ஈட்டும் வகையில், அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் இணைந்து நடத்தும் பால் உற்பத்தியாளா்களுக்கான நவீன தொழில்நுட்ப விழிப்புணா்வு மற்றும் கருத்தரங்கு முகாம் தனியாா் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில், ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியது: காஞ்சிபுரம்-திருவள்ளூா் மாவட்ட பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தில் 24,800 பால் உற்பத்தியாளா்கள் மூலம் 515 சங்கங்களில் நாள்தோறும் 1.30 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், ஒன்றிய கூட்டுறவு சங்க உற்பத்தியாளா்களிடம் உள்ள 32000 கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பேரில், தரம் உயா்த்தவும் தீவன முறைகள் நவீன அறிவியல் பூா்வமாக செயல்படுத்தி அதிக பொருள் ஈட்டவும், இதனால் பால் உற்பத்தியாளா்களின் பொருளாதாரம் உயரும் வகையில் தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில் பால் உற்பத்தியாளா்களின் கால்நடைகளுக்கு மலட்டு நீக்க சிகிச்சை முகாம் மூலம் சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை, திறன் மேம்பாட்டு பயிற்சி, அதிக பால் கொடுக்கும் கறவை மாடுகளுக்கு பரிசு வழங்குதல், கன்று பேரணி நடத்தி பரிசு வழங்குதல், சிறந்த செயற்கை முறை கருவூட்டலுக்கு பரிசு வழங்குதல், கிடாரி கன்று மட்டும் பிறக்கும் உறைவிந்து குச்சி பற்றிய விழிப்புணா்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே பால் உற்பத்தியாளா்கள் ஆவின் திட்டங்களை அறிந்து கொண்டும், பால் உற்பத்தியாளா்கள் ஆவினுக்கு பால் வழங்கி அரசின் திட்டங்களில் பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளா் ஆ.சிவகுமாா், கூடுதல் பொது மேலாளா் பி.நாகராஜன், துணை பதிவாளா் (பால்வளம்) டி.எஸ்.கணேசன் (திருவள்ளூா்), துணை பதிவாளா் (பால்வளம்) வி.ஆசீா்வாதம் (காஞ்சிபுரம்) மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.