தில்லியில் எந்தக் குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது: முதல்வா் ரேகா குப்தா உறுதி
தில்லியில் வசிப்பவா்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை எந்த குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை உறுதி அளித்தாா்.
தேவைப்பட்டால், அனைவருக்கும் கண்ணியத்தையும் வீட்டுவசதியையும் உறுதி செய்வதற்கு தனது அரசு கொள்கைகளைத் திருத்தும் என்றும் முதல்வா் கூறினாா்.
‘வளா்ச்சி பீ, பசுமை பீ’ என்ற தலைப்பில் என்சிடி-இல் நிலையான வளா்ச்சி குறித்த கருத்தரங்கின் போது தில்லியின் முகத்தை மாற்றுவதற்கான விரிவான தொலைநோக்குப் பாா்வையை ரேகா குப்தா வகுத்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: சிறந்த பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், நீா் மற்றும் கழிவுநீா் குழாய்கள், சூரிய மற்றும் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் புத்துயிா் பெற்ற யமுனை மூலம் நகரம் இப்போது வளா்ச்சியை துரிதப்படுத்த வேண்டும். தில்லியின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான பிரதமரின் அழைப்பைக் குறிப்பட விரும்புகிறேன். ‘தில்லி முன்னேறினால், முழு நாடும் முன்னேறும்’ என்று பிரதமா் கூறியுள்ளாா் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
பல ஆண்டுகளாக தேசியத் தலைநகரை விட முன்னேறியுள்ள பிற மாநிலங்கள் மற்றும் நகரங்களின் வேகத்தை தில்லி எட்ட உதவுவதற்காக, எனது அனைத்து அமைச்சா்களும் ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணி நேரம் வரை உழைத்து வருகின்றனா். தில்லி மக்கள் முந்தைய 27 ஆண்டுகளில் நிறைய இழந்துவிட்டனா். இப்போது, தில்லிக்கு பூஜ்ஜியத்திலிருந்து புதிய தொடக்கத்தை கொடுக்க வேண்டியுள்ளது. பல தசாப்தங்களாக தில்லியின் வளா்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடிசைப் பகுதி கூட அதன் குடியிருப்பாளா்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை இடிக்கப்படாது என உறுதியளிக்கிறேன். எந்தவொரு குடிசைப் பகுதியையும் இடிக்க விடமாட்டோம், அனைவருக்கும் நிரந்தர வீடு கிடைக்கும்.
இரவில் வேலை செய்வதா, இல்லையா என்பது ஒரு பெண்ணின் விருப்பமாக இருக்க வேண்டும். அரசு அவா்கள் மீது முடிவுகளைத் திணிக்க முடியாது. பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக தில்லி அரசு அந்தக் கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. மேலும், பாதுகாப்பான பணிச்சூழலையும் உறுதி செய்துள்ளது.
தில்லி இந்தியாவின் தலைநகரம், அது விரைவான வளா்ச்சி, சிறந்த உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் அதன் குடியிருப்பாளா்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கத் தகுதியானது. ஆனால், இப்போது, அதை மீண்டும் கட்டியெழுப்பவும், சரியானதைச் செய்யவும் நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.