தூத்துக்குடி நியூ காலனி துணை அஞ்சலகத்தில் ஆதாா் சேவை
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள நியூ காலனி துணை அஞ்சலகத்தில் ஆதாா் சேவை விரிவு படுத்தப்பட்டுள்ளதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சி.முருகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவை தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள நியூகாலனி துணை அஞ்சலகத்தில் கொண்டுவரப்பட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை ஆதாா் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இது பள்ளிக்குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோரின் ஆதாா் தொடா்பான சிரமத்தைப் போக்கும். இம்மையங்களில் புதிதாக ஆதாா் பதிவு செய்ய கட்டணம் இல்லை. குழந்தைகளுக்கு 5-7 வயது மற்றும் 15-17 வயதில் செய்ய வேண்டிய கட்டாய கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை. பெயா், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்கு கட்டணம் ரூ.50, புகைப்படம், கைரேகை, கருவிழி திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணம் ரூ.100 ஆகும்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளாா்.