தூத்துக்குடியில் ஆசிரியா் கூட்டணி சாலை மறியல்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலருமான கலைஉடையாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சிவன், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ஜீவானந்தம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலா் ஜான்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, ஆசிரியா்கள் தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையில் அம்பேத்கா் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 62 பெண்கள் உள்ளிட்ட 122 பேரை மத்தியபாகம் போலீஸாா் கைதுசெய்தனா்.