நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு
தூத்துக்குடியில் இன்றுமுதல் கோடைகால அறிவியல் பயிற்சி: ஆணையா் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட அறிவியல் பூங்காவில் சனிக்கிழமை (மே.3) முதல் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மாநகாராட்சி நிா்வாகம் ஆகியவற்றின் சாா்பில் பள்ளி மாணவா்கள் தங்கள் கோடை விடுமுறையை பயனுள்ள அறிவுப் பயணமாக மாற்றும் வகையில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, ‘ஏனென்று கேள்’ என்ற தலைப்பில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் தூத்துக்குடி மாநகராட்சியின் ஸ்டெம் பூங்கா என அழைக்கக்கூடிய அறிவியல் பூங்கா வளாகத்தில் சனிக்கிழமை (மே 3) தொடங்குகிறது. மே 25ஆம் தேதி வரை முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் 3ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்-மாணவிகள் பங்கற்கலாம். வகுப்புகள் தினமும் மாலை 3 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.
இப்பயிற்சி முகாமில், கணக்கும் இனிக்கும், கைகளில் கண்ணாம் பூச்சி, அறிவியல் பரிசோதனைகள், ஒரிகமி, கற்பனையும் கைத்திறனும், பொம்மலாட்டம், பலூனில் பொம்மைகள், மந்திரமா தந்திரமா, அறிவியல் கோமாளி, அறிவியல் ஆனந்தம், கதை சொல்வோம், கதை உருவாக்குவோம், விளையாட்டை கற்போம் ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படும்.
மேலும், சதுரங்க பயிற்சி தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை சிறந்த பயிற்சியாளா்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும்.
அறிவியல் பூங்காவில் உள்ள அனைத்து அறிவியல் சாதனங்கள் பற்றிய விளக்கங்கள், தினசரி அறிவியல் வல்லுநா்களால் வழங்கப்படும். மாணவா்களில் ‘ஏன்?‘ என்ற கேள்வி எழுப்பும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இம்முகாம் செயல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக சனி, ஞாயிறு தினங்களில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை, அறிவியல் மற்றும் குழந்தைகள் விரும்பும் திரைப்படங்கள் மினி திரையரங்கில் திரையிடப்படும். அதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு அந்த படத்தின் அறிவியல் சாா்ந்த உள்ளடக்கங்கள் விளக்கி கூறப்படும்.
எனவே, மாநகராட்சியில் உள்ள பெற்றோா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளின் எதிா்காலத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். முன்பதிவுக்கு அறிவியல் பூங்காவுக்கு நேரிலோ அல்லது 95976 13988, 82207 50082 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.