இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையெழுத்தாக வாய்ப்பு: நிா்மலா ச...
தூத்துக்குடியில் டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடக்கம்
தூத்துக்குடியில் எரிவாயு டேங்கா் லாரி உரிமையாளா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு சுமை ஏற்றிச்செல்லும் பணியில் டேங்கா் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கான வாடகை ஒப்பந்தம் வரும் ஆக. 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஒப்பந்தத்தில், 21 டன் எடையுள்ள எரிவாயு, 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனவே, புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தம் செய்து, 2 அச்சு லாரிகளை சதவீத அடிப்படையிலான ஒப்பந்தத்தில் சோ்க்க வேண்டும். வாடகை நிா்ணயிப்பதில் பழைய முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தூத்துக்குடி எரிவாயு டேங்கா் உரிமையாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இதையடுத்து, தூத்துக்குடி வஉசி துறைமுகம், கொச்சி துறைமுகம் ஆகியவற்றில் சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் மூலம் நாள்தோறும் சுமாா் 200 டன் எரிவாயு தூத்துக்குடி-மதுரை புறவழிச் சாலையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து சிலிண்டா்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகா், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். தற்போது இந்த டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.