தென் மாநிலங்களைப் புறக்கணிக்க பாஜக திட்டம்! - கு.செல்வப்பெருந்தகை
தென் மாநிலங்களைப் புறக்கணிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:
முதல்வா் ஸ்டாலின் பிற மாநில முதல்வா்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து, என்ன ஆபத்து காத்துக் கொண்டு இருப்பதை தெளிவாகக் கூறியிருக்கிறாா். தென் மாநிலங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக இறங்கி இருக்கிறது. மக்களவையில் ஆயிரம் இருக்கைகள் போட வேண்டியதன் உள்நோக்கம் என்ன. இதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை, 545 எம்.பி.க்களுக்கு பதில் 1,000 போ் என்றால், தமிழகத்தின் பிரதிநிதித்துவம் எங்கு இருக்கும்?
இப்போது நாடாளுமன்றத்தில் 10 நிமிஷங்களுக்கு மேல் பேச முடியவில்லை. 1,000 எம்.பி.க்கள் வந்துவிட்டால் 2 நிமிஷம் கூட தமிழகத்தின் சாா்பாக பேச நேரம் கிடைக்காது. பாஜகவின் திட்டமே மக்களை திசைதிருப்புவதுதான். மறுசீரமைப்பு என்பது, பாஜக திட்டமிட்டதுபோல நடந்தால் தென்னிந்தியாவே பாதிக்கப்படும்.
ஜிஎஸ்டி செலுத்துவதில் 3-ஆவது பெரிய மாநிலம் தமிழகம். ஆனால் எங்களுடைய உரிமைத் தொகை குறைவாக கொடுக்கப்படுகிறது. பேரிடா் பாதிப்பு வந்த மாநிலத்துக்கு கொடுக்காமல் வராத மாநிலத்துக்கு கொடுக்கிறாா்கள். பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய ரூ.2,000 கோடி தொகையை கொடுக்க மறுக்கிறாா்கள். இது போன்ற உரிமைக்கான கேள்வியை மட்டும்தான் கேட்கிறோம் என்றாா்.