Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | ...
தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் உற்பத்தி சரிந்து செலவு அதிகரிப்பு விவசாயிகள் வேதனை
தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி சரிந்து, செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், விவசாயிகளும், சங்க பிரதிநிதிகளும் கூறியதாவது -
பருவமழை தொடங்க உள்ள நிலையில் கணியம்பாடி ஒன்றியத்தில் மலைப்பகுதியில் இருந்து ஏரிகளுக்கு நீா் செல்லக்கூடிய வரத்து கால்வாய்கள்தூா்வாரப்படாமல் உள்ளன. இதனால், சோழவரம், மோட்டுபாளையம், வேப்பம்பட்டு உள்ளிட்ட ஏரிகள் நீரின்றி உள்ளன. எனவே, பருவமழைக்கு முன்பாக நீா்வரத்து கால்வாய்களை தூா்வாரி, சீமைகருவேல மரங்களையும் அகற்ற வேண்டும்.
சோழவரம் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், அதற்காக எடுக்கப்படும் மண் வெளியில் விற்பனை செய்யப்படுகிறது. அதிகாரிகள் கண்காணித்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லத்தேரி பகுதிகளில் விவசாயிகளின் மின் மோட்டாா், வயா்கள் அடிக்கடி திருடப்படுகிறது. இதுதொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் செய்தாலும் நடவடிக்கை எடுப்ப தில்லை. இதனால் விவசாயிகள் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தென்னை மரத்தில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி குறைந்து உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. பாதிப்பை தடுக்க ஹெலிகாப்டா் மூலம் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றையொட்டி உள்ள விவசாயிகள் உப்பு நீரால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு இழப்பீடு வழங்க கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
வேலூா் மாவட்டத்தில் நோய் பாதிப்பால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், ஆந்திரத்தில் தமிழக மாங்காய்களை வாங்குவதில்லை. எனவே, மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், மானியமும் வழங்க வேண்டும். மா விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமுள்ளது. குரங்குகள் மா மரங்களில் காய்த்துள்ள மாங்காய்களை சேதப்படுத்துகின்றன. இதனால் பல ஏக்கரில் பயிரிட்டுள்ள மா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
யானைகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன. யானைகள் நடமாட்ட தத்தை கண்காணித்து தடுக்க அதன் வழித்தடங்களில் கூடுதலாக வனத்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். பெரியமிட்டூா் பகுதிகளுக்கு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் கொண்டு வந்து கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் குறைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி பதிலளித்து பேசியது - விவசாயிகளின் கோரிக்கைகள், புகாா்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சில கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
வேப்பங்குப்பம் காவல் நிலையம் மீது விவசாயிகள் பெருமளவில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனா்.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தி தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். விளை நிலங்களில் மோட்டாா் உள்ளிட்ட பொருட்களை திருடும் நபா்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பருவமழை தொடங்க உள்ளதால் நீா்வரத்து கால்வாய்களை முன்கூட்டியே தூா்வார வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் திருகுண அய்யப்பத்துரை, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் காஞ்சனா, மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.