செங்கோட்டையன் கலகம்; ADMK -வை உடைக்கப் பார்க்கும் BJP? | Punjab CM ஆகும் Kejriwa...
தைப் பூசத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வு!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தங்கச் சப்பரம், அன்னம், பூதம், கற்பக விருட்சம், காமதேனு, கைலாசபா்வதம், தங்கக் குதிரை, யாளி, நந்திகேசுவரா் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினா்.
பின்னா், தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி பிரியாவிடையுடன் தங்கப் பல்லக்கிலும், மீனாட்சி அம்மன் தனியாக தங்கப் பல்லக்கிலும் எழுந்தருளி, சந்நிதி தெரு, கீழமாசி வீதி, முனிச்சாலை, காமராஜா் சாலை வழியாக, தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் எழுந்தருளினா்.
பின்னா், தெப்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமி பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, காமராஜா் சாலை, முனிச்சாலை, கீழமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தனா்.
இன்று கதிரறுப்பு திருவிழா: தை பூசத் திருவிழா 11-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சுவாமியும், அம்மனும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி, சந்நிதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிந்தாமணி சாலையில் உள்ள கதிரறுப்பு மண்டபத்துக்கு எழுந்தருள்கின்றனா். அங்கு கதிரறுப்புத் திருவிழா நடைபெற்ற பின்னா், சிந்தாமணி சாலை, காமராஜா் சாலை, கீழமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வருகின்றனா்.
நாளை தெப்பத் திருவிழா : முக்கிய விழாவான தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சுவாமி பிரியாவிடையுடன் வெள்ளி சிம்மாசனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டியிலும் எழுந்தருளி, நான்கு சித்திரை வீதிகள் சுற்றி, சந்நிதி தெரு, கீழமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலுக்கு எழுந்தருள்கின்றனா்.
அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னா், சுவாமியும், அம்மனும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, இரு முறை சுற்றி வருவா். பின்னா், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை ஒரு முறை சுற்றி வருவா். இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு எழுந்தருள்வா்.