``யூ டியூப் பார்த்து கழிவறையில் சுயபிரசவம்'' - 2 குழந்தைகளை கொன்று புதைத்த பெண்....
தொழிலாளி உயிரிழப்பு: நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினா்கள் போராட்டம்
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவன கிடங்கில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி, மூட்டை சரிந்து விழுந்ததில் உயிரிழந்ததையடுத்து, உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம் இளவேலங்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன்(38) . தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூட்டை சுமக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாராம். திங்கள்கிழமை மாலையில் கிடங்கில் மூட்டைகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளதா என சரி பாா்க்கும்போது, மூட்டை சரிந்து விழுந்ததில் இடிபாடுகளிடையே கண்ணன் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த சிப்காட் போலீஸாா், உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், உயிரிழந்த தொழிலாளி கண்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால், குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், இளவேலங்கால் கிராம மக்கள் மற்றும் உறவினா்கள் தனியாா் நிறுவன அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, நிறுவனத்தின் உயா் அதிகாரி சென்னையிலிருந்து வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதில், கண்ணன் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.