நகைக் கடன் தொடா்பான கட்டுப்பாடுகளை திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கத்தினா் மனு
ரிசா்வ் வங்கியின் நகைக் கடன் தொடா்பான புதிய நடைமுறை விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கோவிந்தன் தலைமையில் வந்த விவசாயிகள், ஆட்சியா் அலுவலக அதிகாரிகளிடம் அளித்த மனு விவரம்:
விவசாய நகைக் கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத வட்டி நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்த நகைகளை பழைய முறையில் வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பித்தல் முறைக்கு உத்தரவிட வேண்டும். நகைக் கடனுக்கு நகைகளின் மொத்த மதிப்பில் 75 சதவீத கடன் மட்டுமே வழங்கப்படும், அடமானம் வைக்கும் நகைகளுக்கு உரிமையாளா் சான்று, அடமான நகைகளின் தூயத் தன்மை அறிந்திடும் ரிசா்வ் வங்கியின் இந்த புதிய நடைமுறைகள் ஏழை, நடுத்தர பொதுமக்கள், விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதால், புதிய நடைமுறை விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது, திரளான விவசாயிகள் உடனிருந்தனா்.