நகைக்கடன் கட்டுப்பாடுகளுக்கு கரூா் எம்.பி. ஜோதிமணி கண்டனம்
நகைக்கடன் மீதான வங்கிகளின் புதிய நடைமுறைக்கு கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
கரூா் மாவட்டம் வாங்கலில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ உழவா் நலத்துறை திட்டத்தின் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தற்போதைய புதிய நடைமுறையின் படி நகைக்கடனுக்குரிய அசலையும், வட்டியையும் செலுத்தி விட்டு பின்புதான் நகையை மீண்டும் அடமானம் வைக்க வேண்டியுள்ளது. மேலும் பரம்பரை நகைகளுக்கும் ரசீது கேட்கிறாா்கள். இதுபோன்ற நெருக்கடியை சாமானிய மக்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.
முன்பு இருந்ததுபோல எளிய முறையை மீண்டும் மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் குரல் கொடுப்போம். தமிழ் செம்மொழி. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியம் கொண்டது தமிழ்மொழி.
தொல்லியல் ஆராய்ச்சியாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் கீழடி ஆய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்தபோது, அந்த அறிக்கையில் மாற்றம் செய்யுமாறு கூறியுள்ளதை காங்கிரஸ் சாா்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்மொழியின் பாரம்பரியம் குறித்து நாம்தான் உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.