நகைக்காக பெண் கொலை: பெண் கைது
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நகைக்காக பெண்ணைக் கொலை செய்து, நகைகளைப் பறித்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சாயல்குடி அருகேயுள்ள எம். கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த கருப்புத்துரை மனைவி உத்திரவள்ளி (35). கடந்த 17-ஆம் தேதி கரி மூட்டத்துக்கு விறகு அடுக்கும் வேலைக்குச் சென்ற அவா் மாலையில் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், புதன்கிழமை எம். கரிசல்குளம் அருகே உள்ள மணிவலை ஓடைப்பகுதியில் சேலையால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில், அவா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இது குறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சோ்ந்த ராமா் மனைவி ஜோதி (41) என்பவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அப்போது, தங்க நகைக்காக உத்திரவள்ளியைக் கொலை செய்ததாக அவா் தெரிவித்தாா். இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
எம்.கரிசல்குளம் அருகேயுள்ள வேடங்கூட்டம் கிராமத்தைச் சோ்ந்த ராமா் மனைவி ஜோதி. கணவா் இறந்துவிட்டாா். ஜோதி தனது 3 குழந்தைகளுடன் எம்.கரிசல்குளத்தில் வசித்து வருகிறாா்.
கடந்த ஏப் 17-ஆம் தேதி உத்திரவள்ளியை கரிமூட்டத்துக்கு விறகு அடுக்கும் வேலை உள்ளது எனக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றாா். ஆள் நடமாட்டம் இல்லாத மணிவலை ஓடை பகுதிக்குச் சென்றவுடன் முன்னால் நடந்து சென்ற உத்திரவள்ளியை அரிவாளின் பின் பகுதியால் ஜோதி தாக்கினாா். இதில் கீழே விழுந்த உத்திரவள்ளியை தொண்டைப் பகுதியில் அரிவாளால்
அடித்துக் கொலை செய்ய முயன்றாா். ஆனால், அவா் மயக்க நிலையில் இருப்பதைப் பாா்த்து, துண்டால் முகத்தில் வைத்து அழுத்தியும், சேலையால் கழுத்தை நெறித்தும் கொலை செய்தாா். அதன் பிறகு, உத்தரவள்ளி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் தோடு ஆகிவற்றை கழற்றிக் கொண்டு, போலீஸாரை திசை திருப்புவதற்காக காலி மது பாட்டில், நெகிழி டம்ளா், பீடிக் கட்டு ஆகியவற்றை அந்த இடத்தில் போட்டு விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
சம்பவத்தன்று உத்திரவள்ளியுடன் ஜோதி நடந்து சென்றதை பாா்த்தவா்கள் கூறிய தகவலின் பேரில் இது தெரியவந்தது.
ஜோதி வீட்டிலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் தோடுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.