"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - ச...
நகைப் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டர்; காட்டிக்கொடுத்த ஷு: காவல் ஆணையர் அருண் விளக்கம்
சென்னை: சென்னைக்கு விமானத்தில் வந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு விமானம் மூலம் தப்பிச் செல்லவிருந்த வடமாநிலக் கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்துள்ளார்.
குற்றச்செயலில் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அடையாளம் காட்டுவதற்காக, இன்று அதிகாலை தரமணி ரயில்நிலையம் பகுதிக்கு கொள்ளையர்களைக் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
அப்போது, ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த வடமாநில கொள்ளையன் ஜாஃபர் இரானி (32) என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இருவரும், ஈரானியக் கொள்ளைக் கும்பலைச் சோ்ந்த கொள்ளையா்கள் என்பதும், மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே உள்ள அம்பிவேலிப் பகுதியைச் சோ்ந்த அம்ஜத் இரானி (20), ஜாபா் இரானி (32) என்பதும், அவா்கள்தான் 6 இடங்களிலும் தங்கச் சங்கிலி பறித்தவா்கள். இவர்களில் ஜாபர் இராணி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது, சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை கைது செய்தோம். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸாா் கைது செய்தனா்.
அவர்கள் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அடையாளம் காட்ட தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றோம். அப்போது அங்கே அவர்கள் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது சுட்டனர். ஆனால் நல்வாய்ப்பாக காவல்துறையினருக்கு காயம் ஏற்படவில்லை. காவல் வாகனம் மீது குண்டுகள் பாய்ந்தன. தற்காப்புக்காக, காவல்துறையினர் சுட்டதில் ஜாபர் பலியானார் என்று தெரிவித்தார்.
மேலும் காவல்துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த காவல் ஆணையர் அருண், பறிக்கப்பட்ட செயன்களையும் இருசக்கர வாகனத்தையும் காட்டுவதற்காக ஜாபரை அழைத்துச் சென்றபோது இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டது.
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். குற்றத்துக்குப் பயன்படுத்தியிருப்பது கர்நாடக பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் நேற்று குற்றவாளிகளால் பறிக்கப்பட்ட செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்துக்கு உள்ளிருந்துதான் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மிகப்பெரிய கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள். மோட்டார் பைக்கை பறிமுதல் செய்ய கைதானவர்களை அழைத்துச் சென்றபோதுதான் இந்த சம்பவம் நடந்தது.
கைதான இருவரும் தனித்தனியே விமானத்தில் சென்னை வந்து ஒன்றாக கொள்ளையடித்துவிட்டு மீண்டும் தனித்தனியாக விமானத்தில் தப்புவது வழக்கம். இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 26 சவரன் மதிப்புள்ள ஆறு செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
நேற்று நடந்த செயின் பறிப்பில் ஒரு பெண்மணி கீழே விழுந்ததில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
ஈரானிய கொள்ளையர்கள் என்பது மும்பை சுற்றுவட்டாரப் பகுதியினர்தான். கைதான 3 பேரில் ஒருவர் முன்கூட்டியே தமிழகம் வந்து தேவையான ஏற்பாடுகளை செய்து விடுவார்.
சென்னையில் நடந்த செயின் பறிப்பில் 7 இடங்களில் நடந்த திருட்டுச் சம்பவங்களை கண்டுபிடித்துவிட்டனர். கடந்த வருடம் 34 செயின் பறிப்பு நடந்துள்ளது. அதில் 33 வழக்குகளைக் கண்டுபிடித்துவிட்டோம். தனிப்படை காவல்துறையினர் ஈரானிய கொள்ளையர்களைத் தேடிச் செல்வார்கள்.
நேற்று காலை 4.15 விமானத்தில் சென்னை வந்து இறங்கியிருக்கிறார்கள். உடனே இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு 6 மணிக்கெல்லாம் குற்றத்தில் ஈடுபடத் தொடங்கி, மீண்டும் காலை 10 மணிக்கெல்லாம் விமானத்தில் ஏறிவிட்டார்கள்.
காவல்துறையினர் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு ஆங்காங்கே சோதனையில் ஈடுபடத் தொடங்கியதைத் தொடர்ந்துதான், மிக விரைவாக குற்றத்தை முடித்துக்கொண்டு அவர்கள் சென்னையை விட்டுப் புறப்பட்டுள்ளனர்.
இந்த ஈரானிய கொள்ளையர்கள் மகாராஷ்டிர மாநிலம் அபிவேலி பகுதியில் இருகிறார்கள். இவர்கள் சென்னையை விட்டுத் தப்பிச் சென்றிருந்தால், அபிவேலிப் பகுதிக்குள் சென்று இவர்களைப் பிடிப்பது மிகவும் கஷ்டம்.
குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு, உடைகளை மட்டும் மாற்றிக்கொண்டார்கள். ஷுவை மாற்றவில்லை அதை வைத்து எளிதாக அவர்களை அடையாளம் காண முடிந்ததாகவும் அருண் தெரிவித்துள்ளார்.