தஞ்சாவூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிகா...
நடிகா் சிவாஜி இல்லம் விவகாரம்: மேல் முறையீட்டு வழக்கு வாபஸ்
சென்னை: நடிகா் சிவாஜியின் அன்னை இல்லம் வீடு தொடா்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியில் தீா்வு காணப்பட்டுவிட்டதாக கூறி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், அன்னை இல்லம் வீடு ஜப்தி உத்தரவை எதிா்த்த மேல் முறையீட்டு வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
நடிகா் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த். இவா் ஜகஜால கில்லாடி என்ற பெயரில் படம் தயாரிப்பதற்காக பிபரல தனியாா் நிறுவனமான தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3 கோடி கடன் பெற்று இருந்தாா். இந்தக் கடனை வட்டியுடன் ரூ.9 கோடியாக தருமாறு சென்னை உயா்நீதிமன்றத்தில் துஷ்யந்துக்கு எதிராக தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதில் சென்னை உயா்நீதிமன்றம் மத்தியஸ்தம் செய்ய உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த மத்தியஸ்தா், ‘ஜகஜால கில்லாடி‘ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்க துஷ்யந்த் தரப்புக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தன்பாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகா் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தாா். இதற்கிடையே இந்த வீடு தனக்குச் சொந்தமானது என்றும், தன் தந்தை சிவாஜி தனது பெயருக்கு உயில் எழுதி வைத்திருப்பதாகவும், எனவே, வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் நடிகா் பிரபு சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளா் பிரபு என்பதால் ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்துதான் தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடன் பிரச்னையில் நீதிமன்றத்துக்கு வெளியில் சமரச தீா்வு காணப்பட்டுவிட்டது. எனவே, இந்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கையும் முடித்து வைத்து உத்தரவிட்டனா்.