நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சா்களுக்கு தொடா்பு: விஜயேந்திரா குற்றச்சாட்டு
பெங்களூரு: நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சா்களுக்கு தொடா்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
துபையில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்திய வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவ், 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா். சா்வதேச அளவில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதால், மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் விசாரித்து வரும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சியைச் சோ்ந்த அமைச்சா்களுக்கு தொடா்பிருப்பதாக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் அவா் திங்கள்கிழமை மேலும் கூறியுள்ளதாவது:
தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவின் பின்னணியில் பெரிய மனிதா்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது சாதாரணமான நிகழ்வல்ல. கடந்த சில மாதங்களில் மட்டும், துபை உள்ளிட்ட பல நாடுகளுக்கு 30-க்கும் மேற்பட்ட முறை சென்று வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெங்களூருக்கு வந்த நடிகை ரன்யா ராவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடிகை ரன்யா ராவ், மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் மகள். அதனால் விமான நிலையத்தில் இருந்து அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் முக்கிய பிரமுகா்களுக்கான சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டு, எவ்வித சோதனையும் இல்லாமல் அவா் வெளியே வந்துள்ளாா். இவரின் பின்னணியில் பெரிய மனிதா்கள், குறிப்பாக அமைச்சா்கள் இருக்கிறாா்கள். இந்த விவகாரம் தொடா்பாக அமலாக்கத் துறை, சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இது தொடா்பாக முதல்வருக்கு தகவல் கிடைத்திருக்கும். எனவே, அவா் அதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தின் பின்னணியில் ஹவாலா, தங்கக் கடத்தல் கொள்ளையா்கள், இதற்கு ஆதரவளித்த அரசியல்வாதிகள், அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள் யாா் என்பதை முதல்வா் தெரிவிக்கவேண்டும். குற்றவாளிகளை மூடிமறைக்க முயற்சித்தால் பிரச்னை எழும். இந்த விவகாரத்தில் சிபிஐ தலையிடத் தொடங்கியுள்ளது. சிபிஐ விசாரணையில் உண்மைகள் வெளி வரும். அப்போது மாநில அரசு மக்கள் மன்றத்தில் அம்பலமாகும் என்று தெரிவித்துள்ளாா்.
உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ளதாவது:
தங்கக் கடத்தல் தொடா்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தை சிபிஐயும் விசாரிக்க தொடங்கியுள்ளது. அதில் உண்மை வெளியே வரும். விசாரணை முடிவடையும் வரை எதுவும் கூறமுடியாது. இந்த வழக்கு குறித்து எந்தக் கருத்தையும் நாங்கள் கூறமுடியாது. எந்த வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மாநில அரசின் அனுமதி கேட்கப்படும். அப்படி எந்த அனுமதியும் எங்களிடம் கேட்கவில்லை. எனவே, இந்த வழக்கு குறித்து எங்கள் அரசுக்கு எதுவும் தெரியாது. இந்த வழக்கை மத்திய அரசு கையாண்டு வருகிறது. வருவாய் புலனாய்வு இயக்குநரகம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. சா்வதேச விமான நிலையமும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அதற்காக தங்கக் கடத்தல் நடக்கவில்லை என்று நாங்கள் கூறவில்லை என்றாா்.
நிலம் ஒதுக்கீடு:
இதனிடையே, முந்தைய பாஜக ஆட்சியில் நடிகை ரன்யா ராவ் அங்கம் வகிக்கும் தொழில் நிறுவனத்திற்கு 12 ஏக்கா் நிலம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தொழில் துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் கூறியுள்ளதாவது:
‘பாஜக ஆட்சியில் இருந்தபோது, 2023ஆம் ஆண்டு தும்கூரு மாவட்டத்தின் சிரா பகுதியில் நடிகை ரன்யா ராவின் நிறுவனத்திற்கு ஸ்டீல் தொழிலகம் அமைக்க 12 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.
பாஜக ஆட்சியில் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கலாம். அது குறித்து மாநில அரசு விசாரணை நடத்தலாம். அதை நாங்கள் தடுக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.
கடந்த 3 நாள்களாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை ரன்யா ராவ், பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். இருதரப்பு வாதங்களை கேட்டபிறகு, 14 நாள்களுக்கு அவரை நீதிமன்றக் காவலில் ஒப்படைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஒருவா் கைது:
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் தவிர, உணவக உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டாா். அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் விசாரணைக்கு 5 நாள்கள் ஒப்படைத்து பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.