நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கையைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது ஜம்மு-காஷ்மீர் பயணத்தை ரத்து செய்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் கார்கே என்ன மாதிரியான கருத்துகளைக் கூறுகிறார்? ஒருபுறம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாட்டுக்குத் துணை நிற்பதாக அவர் கூறுகிறார். மறுபுறம், நாட்டை பலவீனப்படுத்த அவர் முயற்சிக்கிறார். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவரிடம் இருந்து இதைவிட பெரிய பொறுப்பற்ற கருத்து வெளிவந்திருக்க முடியாது.
நாடு தழுவிய போர் ஒத்திகைக்கு அரசு தயாராகி வரும் வேளையில், மக்கள் நாட்டுக்கு துணை நிற்கின்றனர். இந்தச் சூழலில் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ள கருத்து வலி நிறைந்ததாகவும், துரதிருஷ்டவசமானதாகவும் உள்ளது.
கார்கே தனது கட்சித் தலைவர்களிடம் பொறுப்பாகச் செயல்படுவதற்கான அவசியம் குறித்து வலியுறுத்தி இருந்திருக்க வேண்டும். மாறாக, தேசப் பாதுகாப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வரும் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தில் அவரும் இணைந்துள்ளார் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி கூறியதாவது:
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் உளவுத்துறை தோல்வியை முன்வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் விமர்சித்திருப்பது பாதுகாப்புப் படையினரின் மனவலிமையைக் குறைப்பதற்கான முயற்சியாகும். பயங்கரவாதத்துக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரான போராட்டம் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கார்கேவின் கருத்து அவசியமற்றதாகும் என்றார் அவர்.