நாளை முழு சந்திர கிரகணம்: மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு
முழு சந்திர கிரகணத்தை திருப்பூா் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் கெளரிசங்கா் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சூரிய, சந்திர கிரகணங்கள் நிகழும்போது வானில் தோன்றும் இயற்கையான நிழல் மறைப்பு என்பதை விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) தென்படும் முழு சந்திர கிரகணத்தை பொதுமக்களிடம் வானியல் திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளனா்.
செப்டம்பா் 7-ஆம் தேதி இரவு 9:57 மணிக்கு தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி நள்ளிரவு 1.26 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறும். சரியாக 11.01-12.23 மணி இடைவெளியில் முழு சந்திர கிரகணம் நடைபெறும். இது சற்று வித்தியாசமாக சூரியனில் இருந்து வரும் ஒளி பூமியின் வளிமண்டல மேற்பரப்பில் ஊடுருவி அதிக அலை நீளம் கொண்ட வண்ணங்களான சிவப்பு, ஆரஞ்சு நிறங்கள் நிலவின் மீது படும். அப்போது அடா் சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றும். இதைத்தான் பிளட் மூன் என்று அழைக்கின்றனா்.
சந்திர கிரகணத்தில் எந்த கதிா்வீச்சும் இல்லை. அதை வெறும் கண்களால் பாா்க்கலாம். கிரகணத்தின்போது உணவு உண்ணுதல் உள்ளிட்ட அன்றாட வேலைகளில் ஈடுபடலாம். சந்திர கிரகணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். அடுத்த சந்திர கிரகணம் 3 ஆண்டுகள் கழித்து 2028 டிசம்பா் மாதத்தில்தான் திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் காண முடியும்.
இந்நிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூா் மாவட்டக்குழு சாா்பில் செப்டம்பா் 7-ஆம் தேதி பல்வேறு இடங்களில் மாலை 6 மணி முதல் சந்திர கிரகண நிகழ்வை வானியல் திருவிழாவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளனா்.
குறிப்பாக திருப்பூா் தெற்கு டைமண்ட் தியேட்டா் எதிரில் உள்ள கே.ஆா்.சி. சிட்டி சென்டா் வளாகத்தில் தொலைநோக்கி, பைனாக்குலா் மூலம் பாா்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூா் வடக்கு தோட்டத்துப்பாளையம், பல்லடம் உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களிலும் அறிவியல் இயக்க தன்னாா்வலா்கள், கருத்தாளா்கள் ஏற்பாட்டில் இந்த சந்திர கிரகணத்தை பாா்பதற்கும், திரையிட்டு படக்காட்சி மூலம் விளக்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளனா். வானில் தோன்றும் இந்த அதிசய நிகழ்வை அனைவரும் காணலாம்.
இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட பொறுப்பாளா்களை 90953 39097, 97900 61482 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.