குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
நிகழாண்டில் முன் பட்ட குறுவை சாகுபடியில் கூடுதல் மகசூல்
கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் சராசரி மகசூல் அளவு ஏக்கருக்கு 1,940 கிலோ இருந்த நிலையில், நிகழாண்டு 2 ஆயிரத்து 280 கிலோவாக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் இயந்திரம் மூலம் செய்யப்பட்ட குறுவை பருவ நெல் அறுவடை.
தஞ்சாவூா், செப். 18: தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடியில் தட்பவெப்பம் சீராக இருந்ததால் கூடுதல் மகசூல் கிடைத்து வருகிறது.
கடந்த ஆண்டு மேட்டூா் அணை திறப்பு தள்ளிப் போனதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.52 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. மேலும், மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் மகசூல் பாதிப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், நிகழாண்டு மேட்டூா் அணை உரிய காலமான ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டதால், மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 1.95 லட்சம் ஏக்கா் என்ற இலக்கை விஞ்சி 1.99 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. இதில், முன் பட்டத்தில் குறுவை சாகுபடியைத் தொடங்கியவா்களுக்கு அறுவடைப் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மாவட்டத்தில் அறுவடைப் பணிகள் பரவலாக நடைபெறும் நிலையில், இதுவரை 93 ஆயிரம் ஏக்கரில் நிறைவடைந்துள்ளன.
மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 36 இடங்களில் பயிா் அறுவடை சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில், இதுவரை 16 இடங்களில் முடிவடைந்துள்ளது. இதில், ஏக்கருக்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் கிலோவும், குறைந்தபட்சம் 1,672 கிலோவும், சராசரியாக 2 ஆயிரத்து 280 கிலோவும் கிடைத்து வருவது தெரிய வந்தது. கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் சராசரி மகசூல் அளவு ஏக்கருக்கு 1,940 கிலோ இருந்த நிலையில், நிகழாண்டு 2 ஆயிரத்து 280 கிலோவாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட நிகழாண்டு ஏக்கருக்கு சராசரியாக 340 கிலோ கூடுதலாக கிடைத்து வருகிறது என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.
தஞ்சாவூா், ஒரத்தநாடு, திருவையாறு வட்டாரங்களில் சில கிராமங்களில் ஏக்கருக்கு 60 கிலோ எடையில் 45 முதல் 50 மூட்டைகள் வரை மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். சராசரியாக ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டைகள் கிடைத்து வருகின்றன. முன் பட்ட குறுவை பருவத்தில் மழை, வெயில் சீராக இருந்து வருவதே இதற்குக் காரணம் என்றனா் விவசாயிகள்.
இது குறித்து முன்னோடி விவசாயி புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது:
ஏக்கருக்கு ஏறக்குறைய 2 ஆயிரம் கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு சன்ன ரகத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 545 விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளதால், 2 ஆயிரம் கிலோவுக்கு (20 குவிண்டால்) கிட்டத்தட்ட ரூ. 51 ஆயிரம் கிடைக்கிறது. செலவுகள் போக ஏக்கருக்கு ஏறக்குறைய ரூ. 20 ஆயிரம் லாபம் கிடைத்தாலும், உழைப்புக்கேற்றதாக இல்லை. ஏக்கருக்கு 45 முதல் 50 மூட்டைகள் வரை மகசூல் பெறுபவா்களுக்கு ரூ. 68 ஆயிரம் முதல் ரூ. 76 ஆயிரம் வரை கிடைக்கும்.
நெல் தேவை குறைவு காரணமாக விவசாயிகளிடம் வாங்க தனியாா் வியாபாரிகள் முன் வரவில்லை. இதனால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையே விவசாயிகள் முழுமையாக நம்பியுள்ளனா். மேலும், 10 நாள்களுக்குப் பிறகு அரசு கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அதற்கேற்ப அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் இல்லாமல் கொள்முதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழை பெய்தால் நெல்லில் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற நிலையில், ஈரப்பதத்தை தளா்த்தி நெல்லை கொள்முதல் செய்ய அரசு முன் வர வேண்டும் என்றாா் மாரியப்பன்.
குறுவை பருவத்தில் இதுவரை ஏறத்தாழ 50 சதவீதம் அறுவடை நிறைவடைந்துள்ளன. ஜூன் 12-ஆம் தேதிக்குப் பிறகு பயிரிட்டவா்கள் பத்து நாள்களுக்குப் பின்னா் அறுவடைப் பணிகளைத் தொடங்கவுள்ளனா். முழுவீச்சை அடையவுள்ள இந்த அறுவடைப் பணிகள் தீபாவளி வரை தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், அறுவடை இயந்திரங்களையும் போதுமான அளவுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
இதனிடையே, சில நாள்களாக மழை பெய்து வருவதால், விவசாயிகளிடையே மகசூல் குறித்த அச்சமும் நிலவுகிறது. எனவே, கொள்முதல் பணிகளை தேக்கமில்லாமல் மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.