நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்
நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்காக அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், மு.க.அழகிரி, சம்பத்குமார் உள்பட 7 பேர் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் 2014-இல் வழக்குப் பதிவு செய்தனர்.இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை விசாரணை நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து மட்டும் அழகிரியை விடுவித்து, கடந்த 2021-இல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மதுரை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதேபோல வழக்கில் இருந்து முழுமையாக தன்னை விடுவிக்கக் கோரி அழகிரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து மோசடி செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அழகிரியை விடுவித்த மதுரை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேபோல, வழக்கின் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் முழுமையாக தன்னை விடுவிக்கக் கோரி அழகிரி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ளுமாறு அவருக்கு உத்தரவிட்டார்.