`முருகன் இருக்கும் மலைகளெல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது!' - புதுச்சேரி அமைச்சர...
நிவாரண முகாம்கள் அருகே தொடரும் துப்பாக்கிச் சூடு: மேலும் 34 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு
காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தவா்களை திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 34 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
காஸா முழுவதும் திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 34 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவா்களில் ராஃபா நகரில் 33 பேரும் மத்திய காஸாவில் ஒருவரும் அடங்குவா் என்று அமைச்சகம் கூறியது.
அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோக மையங்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்தின் நிவாரண மையங்களுக்கும் செல்லும் வழியில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
இதற்கு முன்னா் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களைப் போலவே இவற்றையும் இஸ்ரேல் ராணுவம்தான் நடத்தியதாக சம்பவங்களை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். இருந்தாலும், இந்தத் தகவலை இஸ்ரேல் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுமதித்ததில் இருந்தே அந்தப் பொருள்களை வாங்க முகாம்களை நோக்கி வருவோா் மீது இஸ்ரேல் படையினா் தினமும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனா். ஆனால், ஒரே நாளில் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
கடந்த 3 வாரங்களாக நடத்தப்படும் இதுபோன்ற துப்பாக்கிச்சூடுகளில் இதுவரை நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செஞ்சிலுவை சங்கத்தின் கள மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சுமாா் 200 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஒரே நாளில் இவ்வளவு அதிகம் போ் தங்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தது.
இதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை 170 போ் அந்த மருத்துவமனையில் குண்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் எதுவும் தங்கள் முகாமுக்குள் நடக்கவில்லை என்று ஜிஹெச்எஃப் அமைப்பு விளக்கமளித்துள்ளது.
தங்கள் நாட்டுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 600 நாள்களுக்கும் மேல் கடுமையான தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 55,362 போ் உயிரிழந்துள்ளனா்; 1,28,741 போ் காயமடைந்துள்ளனா் (திங்கள்கிழமை நிலவரம்).
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர கடந்த ஜனவரி மாதம் தற்காலிக போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது 15 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுவித்தன.
ஆனால் இந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. அத்துடன், அந்தப் பகுதிக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் முழு தடை விதித்தது.
இதனால் அங்கு பேரழிவு ஏற்படும் அபாயம் உருவானதைத் தொடா்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தன.
அதையடுத்து ‘குறைந்தபட்ச’ அளவிலான நிவாரணப் பொருள்களை மட்டும் காஸாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஜிஹெச்எஃப் அறக்கட்டளை இந்த உணவுப் பொருள்களை பொதுமக்களிடையே விநியோகத்துவருகிறது.
இருந்தாலும், நிவாரண முகாம்களுக்கு வருவோா் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முற்றுகை காரணமாக பட்டினியால் தவித்துவரும் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் உணவுப் பொருள் ஆசை காட்டி அழைத்து, பின்னா் அவா்களை படுகொலை செய்துவருவதாக காஸா அரசு குற்றஞ்சாட்டிவருகிறது.
இருந்தாலும், தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் மீதுதான் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
நிவாரண முகாமுக்கு எந்த வழியாக வர வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதை மீறுவோா், பாதுகாப்புப் படையினருக்கு நெருக்கமாக வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துவோா் மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. எச்சரிக்கை விடுவிக்கும் வகையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பிறகும் அதைக் கேட்காமல் முன்னேறி வருவோரை நோக்கிதான் படையினா் துப்பாக்கியால் சுடுகிறாா்கள் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.