பங்குச் சந்தை சரிவுக்கு காரணம்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
லாபத்தை முன்பதிவு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச் சந்தை நல்ல லாபத்தை அளித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
லாபத்தில் உள்ள பங்குகளை விற்று முதலீட்டுடன் சேர்த்து லாபத்தை எடுத்ததே பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2024 அக்டோபரில் இருந்து தற்போது வரை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1.56 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
2025-ல் இதுவரை (ஜனவரி, பிப்ரவரியில்) மட்டும் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.
இதனிடையே இந்திய பங்குச் சந்தை சரிவுக்கான காரணம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், லாபத்தில் உள்ள பங்குகளை விற்று முதலீட்டுடன் சேர்த்து லாபத்தை எடுத்ததே பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை விற்பனை செய்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலீடுகள் நல்ல பலனைத் தரும் சூழல் இந்தியாவில் உள்ளதாகக் கூறினார்.
நிதித் துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே பேசும்போது, உலக அளவில் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்புவதாகவும் அவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதிகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இந்தியாவும் ஒன்று. அது மீண்டும் தொடரும் எனக் கூறினார்.
பணவீக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசின் விநியோக நடவடிக்கைகள், ரிசர்வ் வங்கியின் தேவை சார்ந்த முயற்சிகள் இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | 8 நாள்களுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!